‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21

tigபூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது குடிலுக்குள் ஊன்கொழுப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நிழல்கள் அசைய பிரேமை நடந்தாள். அவன் எங்கிருக்கிறோம் என்று உணராது மலைத்த உள்ளத்துடன் நோக்கியபடி கிடந்தான். பிரேமை வந்து அவனைக் கண்டு “விழித்துக்கொண்டீர்களா?” என்றாள். அவள் கையில் சிறிய ஊன்நெய் விளக்கு இருந்தது. “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “எழுந்து முகம் கழுவுங்கள். உணவு சித்தமாக உள்ளது” என்றாள். “உணவா? இனி நாளை காலையில் மட்டுமே என்னால் உணவு உண்ண முடியும்” என்று அவன் சொன்னான். “முகம் கழுவி வாருங்கள். துயிலெழுந்ததும் இங்கே பசிக்காது. குளிருக்காக உடல் எரியத் தொடங்கும்போதே பசி எழும். முதலில் ஊன்சாறு சற்று அருந்துங்கள். குடல்களை துயிலெழுப்ப வேண்டாமா?” என்று அவள் சொன்னாள். “கொண்டு வா” என்று அவன் மெத்தையிலேயே எழுந்து அமர்ந்தான். “இங்கு அருந்தலாகாது. உங்களுக்கு இருப்பிடம் ஒருக்கியிருக்கிறேன்” என்றாள்.

அவன் சோம்பல்முறித்தான். நெடுநேரத் துயிலுக்குப் பிறகு உடல் முழு உயிரையும் திரும்பப் பெற்றுவிட்டிருந்ததனால் கண்கள் ஒளிகொண்டிருந்தன. அச்சிறு இல்லத்தின் ஒவ்வொரு பொருளையும் துலக்கமாக பார்க்க முடிந்தது. வெளியே சென்று முகம் கழுவும்போது கடுங்குளிர் நிறைந்த காற்று சுழன்றடிப்பதை உணர்ந்தான். தன் புரவி அக்குளிரை தாங்குமா என்ற எண்ணம் எழுந்தது. குடிலுக்குள் திரும்ப வந்து “குளிர்காற்று வீசுகிறது. எனது புரவி எங்கே?” என்றான். “அதை இங்கு கூட்டிவந்துவிட்டேன். நமது குடிலுக்குள்தான் இருக்கிறது. அங்கும் கணப்பிட்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள்.

பூரிசிரவஸ் தளர்ந்த காலடிகளுடன் சென்று இருக்கையில் அமர்ந்தான். ஊன்சாறின் மணம் எழுந்ததும் தனக்கு பசி எடுப்பதை உணர்ந்தான். புன்னகைத்து “நன்கு பசிக்கிறது. இங்குதான் இப்போதுதான் உடல் உடைந்து திறந்துவிடுமளவுக்கு உண்டேன். மீண்டும் பெரும்பசி. விந்தைதான்” என்றான். அவள் பெரிய பற்களைக் காட்டி சிரித்து “எப்போது உண்டீர்கள்?” என்றாள். “இன்று உச்சிப்பொழுதில்” என்றான். “இன்றல்ல, நேற்று” என்று அவள் சொன்னாள். “நேற்றா? நான் இன்றுதானே வந்தேன்?” என்று அவன் சொல்ல “நேற்று உச்சிப்பொழுது உணவுண்டபின் படுத்து இரவெல்லாம் துயின்று பகலிலும் துயின்று இப்போதுதான் விழித்தெழுகிறீர்கள்” என்று அவள் சொன்னாள்.

“ஒரு நாள் முழுக்க துயின்றிருக்கிறேனா?” என்று அவன் திகைத்தான். “ஒரு நாளுக்கும் நான்கு நாழிகை கூடுதலாக” என்று அவள் சொன்னாள். பூரிசிரவஸ் நம்பமுடியாமல் அவள் இளையவளை பார்த்தான். “ஆம், நீங்கள் துயில்வதை நான் நாழிகைக்கொருமுறை வந்து பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். பூரிசிரவஸ் “இன்றுதான் எனக்கு இவ்வளவு நீண்ட துயில் தேவைப்பட்டிருக்கிறது. நான் சென்ற இருபதாண்டுகளில் ஒருமுறைகூட நான்கு நாழிகைக்குமேல் துயின்றதில்லை. ஒவ்வொரு சிறு ஒலிக்கும் எழுவேன். தொடர்ந்து துயில் அமைந்ததே இல்லை” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “பணிகள். ஒவ்வொரு முறையும் ஒரு பணியை அறுத்து நிறுத்திவிட்டுத்தான் படுப்பேன். கனவுக்குள் அது உருமாறி என்னை தொடர்ந்து வரும். விழித்த முதல் கணமே பணிதான் வந்து நிற்கும். இருபதாண்டுகளுக்கும் மேலாக இடைவெளியே இல்லாமல் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.”

புருவங்களில் மடிப்பு விழ “பணி எதன்பொருட்டு?” என்று அவள் கேட்டாள். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து பின்பு வெடித்து நகைத்து “பணிபுரிபவர்கள் அந்தக் கேள்வியை கேட்கலாகாது. அக்கேள்வியை எழுப்பிக்கொள்பவர்கள் எப்பணியும் செய்ய இயலாது” என்றான். அவள் புரியாமல் “எதன்பொருட்டு பணிபுரிந்தீர்கள்?” என்று மீண்டும் கேட்டாள். “என் நாடு வலுவுறும்பொருட்டு. என் குடி சிறப்புறும்பொருட்டு. அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் நடத்தும் அரசியலாடலில் எங்கள் பங்கைப்பெறும் பொருட்டு” என்றான். பின்னர் “அப்படி சொல்லிக்கொள்ளலாம். அதை நம்பி செயல்பட்டேன், அவ்வளவுதான்” என்று சேர்த்துக்கொண்டான்.

அவள் “உங்கள்மேல் எதிரிகள் படையெடுத்து வந்து உங்களை தோற்கடித்தால் என்ன செய்வது?” என்றாள். “எங்கள் எதிரிகளை நாங்கள் வெல்வோம்” என்றான். அதன் பிறகுதான் அவள் என்ன கேட்டாள் என்பதை உணர்ந்து நகைத்து “ஆம், ஒரு படையெடுப்பு நிகழ்ந்தால் போதும். ஒரு நிலப்பெயர்வு உருவானால்கூட போதும். வாழ்நாள் முழுக்க நான் இயற்றிய உழைப்பனைத்தும் வீணாகிவிடும். ஆனால் முற்றிலும் பயனுறுதி கொண்ட ஒன்றை மட்டுமே இயற்றவேண்டுமென்று எண்ணி எவரும் எதையும் செய்ய இயலாது” என்றான். “பிறகெதற்கு பணியாற்றவேண்டும்?” என்று அவள் கேட்டாள். “எனது நிறைவுக்காக. நான் வாழ்கிறேன் என்பதற்காக” என்றான் பூரிசிரவஸ்.

அவள் “அந்நிறைவு உங்களுக்கு வந்துவிட்டிருக்கிறதா?” என்று கேட்டாள். இவள் அறிந்துதான் கேட்கிறாளா என்ற துணுக்குறலை அவன் அடைந்தான். அவள் விழிகளை சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மிக எளிமையாக சிறுமிபோல் அதை கேட்டாள் என்பதால் கண்கள் சிரிப்பை காட்டின. புன்னகைத்து “தெரியவில்லை” என்றான். பிறகு “உண்மையை சொல்லப்போனால் இல்லை. இது எனக்கு நிறைவு தரும் என்று எண்ணி இதில் இறங்கினேன். இது என் கடன் என்று நம்பினேன். நிறைவு தரவில்லை என்று உணர்ந்தேன். என் கடன் அல்ல என்று ஐயம் கொண்டேன். ஆயினும் தொடங்கியதை விடமுடியாமல் அதன் பின்னர் சென்றேன்” என்றான்.

அவன்மேல் மெல்ல கையை வைத்து “இங்கிருந்துவிடுங்கள்” என்று அவள் சொன்னாள். “இங்கிருக்கலாம். ஆனால் நான் விசையுடன் ஓடப் பழகிய புரவி. இங்குள்ள மலைப்பாறைகள் காலமின்றி, அசைவின்றி இருப்பவை. இப்போது ஒரு தருணம் முடிவடையப் போகிறது. போர் அணுகவிருக்கிறது. போரில் நான் கலந்துகொள்வேன். இப்போரில் நான் உயிருடன் மீண்டேன் என்றால் பிறிதொரு வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று எண்ணுகிறேன். எதன்பொருட்டுமின்றி, எதற்குப் பின்னாலும் ஓடாமல் அமையும் ஒரு வாழ்க்கை. இந்த மலைப்பாறைகளைப்போல அல்ல. அது இப்பிறவியில் எனக்கில்லை. ஆனால் கீழிருந்து இந்த மலைப்பாறைகளை நோக்கி தவம்செய்யும் சிறிய பாறைகளுண்டு. அவற்றிலொன்றென ஆக விழைகிறேன்” என்றான்.

அவளுக்கு அவன் சொன்னது எதுவும் புரியவில்லை. “போரில் உங்களுக்கு எதிராக யார் வருவார்கள்?” என்றாள். “பலர்” என்றான். “அதெப்படி ஒருவருக்கெதிராக பலர் வரமுடியும்?” என்றாள். பூரிசிரவஸ் “போர் என்றால் என்ன என்று உனக்கு என்னால் விளக்க முடியாது” என்றான். ஊன்சாறைக் குடித்து எழுந்தபின் அவள் “சற்று நேரம் ஓய்வெடுங்கள். அதற்குள் ஊனுணவு ஒருங்கிவிடும். மைந்தன் வேட்டைக்கு சென்றிருக்கிறான்” என்றாள். பூரிசிரவஸ் “வேட்டைக்கா? எப்போது சென்றான்?” என்றான். “நீங்கள் துயின்றவுடனே சென்றான். உங்களுக்கு காட்டுமானின் கன்றுக்குட்டி ஒன்றை கொண்டுவரப்போவதாக சொன்னான். நேற்று உங்களுக்கு அளித்த ஊன் கடினமானதாக இருந்தது என்று என்னிடம் சினந்தான். நீங்கள் அறிவிக்காமல் வந்தால் நான் என்ன செய்வது என்று கேட்டேன். அவனுக்கு நான் சொன்னது புரியவில்லை. உடனே ஈட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்” என்றாள்.

பூரிசிரவஸ் இல்லத்தின் சிறிய கூடத்தில் தரையிலிட்ட மெத்தையில் அமர்ந்து கால்மேல் தடித்த மென்மயிர்த்தோலாடையை எடுத்து போர்த்திக்கொண்டான். காற்று சீழ்க்கையொலியுடன் ஓடுவதை செவிகொண்டு அமர்ந்திருந்தான். அடுமனைக்குள் பிரேமையின் குரலும் அடுகலங்களின் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தன. வெளியே புரவியொன்றின் கனைப்பொலி கேட்டது. எழுந்து எவரென்று பார்க்க அவன் விழைந்தான். ஆனால் அந்தப் போர்வைக்குள் அவன் கால்கள் உருவாக்கியிருந்த இளவெம்மையை இழக்க விரும்பவில்லை. பிறரறியா இனிய  கனவு போலிருந்தது அந்த வெம்மை. அது தானே உருவாக்கும் வெம்மை என்பதனால் தனக்கு அத்தனை இனிது போலும் என்று எண்ணிக்கொண்டான்.

அவ்வில்லத்தின் கதவுகள் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இரண்டு வெவ்வேறு திசைகளில் திறக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. முதல் கதவு திறந்தது. இரண்டாவது கதவு திறந்ததும் குளிர்காற்று வந்து அறைந்தது. அதற்குள் முதற்கதவு மூடிக்கொண்டது. உள்ளே வந்த மைந்தன் “விழித்துக்கொண்டுவிட்டீர்களா? நீங்கள் நெடுநேரம் துயில்வீர்கள் என்று எண்ணினேன்” என்றான். “இப்போதுதான் விழித்தேன்” என்றான் பூரிசிரவஸ். “உங்களுக்கு இளம் கன்றொன்றை கொண்டுவந்திருக்கிறேன்” என்று யாமா சொன்னான். அவன் ஆடை முழுக்க பனி சிறிய பளிங்கு மணிகளாக தொங்கிக்கொண்டிருந்தது.

பூரிசிரவஸ் “வெளியே கடுங்குளிரென்று எண்ணுகின்றேன்” என்றான். “இல்லை, கடுங்குளிரென்றால் இடுப்புவரை பொருக்குப்பனி நிறைந்திருக்கும். இது குளிர்காற்றுதான். மலைகளின் இடைவெளி வழியாக வழிந்திறங்குகிறது. அங்கே எழுந்துநிற்கும் வெண்மலைகளின் மூச்சு இது. நாளை காலைக்குள் திசைமாறிவிடும். பனிக்காலத்திற்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன” என்றான். தன் ஆடையை உருவி அருகிருந்த சிற்றறையில் கொண்டுசென்று உதறி அங்கேயே தொங்கவிட்டான். உள்ளே அணிந்திருந்த மென்மயிராடையுடன் திரும்பி வந்தான். அவன் கைகள் இரு பெரிய விலங்குகள் போலிருப்பதாக தோன்றியது. உரிக்கப்பட்ட இரு மான்குட்டிகள்.

பிரேமை அகன்ற மரப்பாத்திரத்தில் கொதிக்கும் நீர் கொண்டுவந்து வைத்தாள். அவன் அதற்குள் கைகளை வைத்து சூடுகொண்டான். பின் அதில் துணியை முக்கி தன் காதுகளிலும் முகத்திலும் ஒற்றி எடுத்து வெப்பப்படுத்தினான். “மூத்த பால்ஹிகர் வந்திருக்கிறார், தந்தையே” என்று திரும்பி அவனிடம் சொன்னான். “எங்கு?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவருக்கும் மைந்தர்களுக்குமான பூசல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர் காட்டிலிருந்து பெருங்காளையொன்றை வேட்டையாடி கொண்டுவந்திருக்கிறார். அதை தன் மூன்றாவது மைந்தனுக்கு பரிசளித்து அவன் இல்லத்தில் இப்போது தங்கியிருக்கிறார். பிற மைந்தர்கள் மனைவியரும் குழந்தைகளுமாகச் சென்று அந்த இல்லத்தைச் சூழ்ந்து கூச்சலிடுகிறார்கள். அவர் உள்ளிருந்து திருப்பி ஓசையிடுகிறார்” என்றான்.

“நான் வந்திருப்பதை சொன்னாயா?” என்றான் பூரிசிரவஸ். “அவரிடம் நான் பேசுவதில்லை. எப்போது அவரைத் தூக்கி நிலத்தில் அறைகிறேனோ அதற்குப் பின்னர்தான் அவரிடம் பேசமுடியும்” என்று யாமா சொன்னான். “எனக்கு இந்த ஊர் பழக்கங்கள் எதுவுமே புரிவதில்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். தொட்டியை பிரேமை எடுத்துப்போக சைலஜை பெரிய குடுவை நிறைய ஊன்சாறு கொண்டு வந்து மைந்தனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி தன் முன் வைத்து இரு கைகளிலும் பெரிய கரண்டியை ஏந்தி வேகமாக அருந்தத் தொடங்கினான். பூரிசிரவஸ் “நான் சென்று அவரை பார்க்கவேண்டும். அவரிடம் வாழ்த்து பெற்றுபோவதற்காகவே வந்தேன்” என்றான்.

யாமா முகத்தைத் தூக்கி “எதன் பொருட்டு வாழ்த்து?” என்றான். “நீ அறியமாட்டாய். அங்கு நிலத்தில் ஒரு பெரும்போர் நிகழவிருக்கிறது. நான் அதில் கலந்துகொள்ளவிருக்கிறேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “எக்குடிகள் நடுவே போர்?” என்று அவன் ஆர்வத்துடன் கேட்டான். போர் என அவன் எண்ணுவது அங்கு நிகழும் தோள்பொருதல்களின் கொண்டாட்டத்தை என பூரிசிரவஸ் உணர்ந்தான். “அனைத்துக் குடிகளும் ஒருவரோடொருவர் போர்புரிகிறார்கள். ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள்.” அவன் “ஏன்?” என்றான். “ஏனென்றால் அதுதான் போர். பல லட்சம்பேர் செத்துவிழுவார்கள்.” அவன் கரண்டிகள் காற்றில் அசைவிழந்தன. யாமா “லட்சம் என்றால்?” என்றான். அவன் “ஆயிரம்பேராக ஆயிரம்மடங்கு…” என்றான். கரண்டிகள் மரக்குடுவையை முட்டி ஒலித்து கீழே விழுந்தன. அவன் பெருமூச்செறிந்தபோது பெருந்தசைத்திரள்கள் கொப்பளித்து அமைந்தன.

பூரிசிரவஸ் “போர் என்பது அதுதான்” என்றான். திகைத்த விழிகளுடன் யாமா அவனை பார்த்தான். பின்னர் மெல்ல சிரித்து “அனைத்துக் குடிகளும் போரிடுவார்களா? யார் யாரை வெல்வார்கள்?” என்றான். “யாரும் யாரையும் வெல்ல முடியாது. எல்லோரும் தோற்றுப்போகும் ஒரு போராகக்கூட இருக்கலாம். உனக்கு அதற்குமேல் புரியாது” என்றபின் “அருந்து” என்றான் பூரிசிரவஸ். “அப்போரில் உங்கள் குடியும் கலந்து கொள்ளப்போகிறதா?” என்றான். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். யாமா “நீங்கள் அதில் போரிடுவீர்களா?” என்றான். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

யாமா வெடித்து நகைத்து “குழந்தையைப்போல் உடல் கொண்டிருக்கிறீர்கள். உங்களை அவர்கள் எளிதில் வென்றுவிடுவார்களே?” என்றான். பூரிசிரவஸ் “இது உடலால் ஆன போரல்ல, மைந்தா. படைக்கலங்களால் ஆன போர். ஆற்றல் என்பது உடலில் அல்ல, உள்ளத்தில் திகழ்கிறது. உள்ளத்தைப் பயிற்றுவித்து கண்களையும் கைகளையும் உடன்செல்ல வைத்தவனே வீரன்” என்றான். யாமா “நீங்கள் வீரரா?” என்றான். “என் கையில் வாளிருந்தால் பாரதவர்ஷத்தில் மிகச் சிலரே எனக்கு முன்னால் இமைக்கணத்திற்குமேல் எதிர்நிற்கமுடியும். அங்க நாட்டரசர் கர்ணன் மட்டுமே நான் அஞ்சுவதற்குரியவர்” என்றான்.

யாமா “வாள்?” என்றபின் “நீங்கள் வாளால் வெட்டினால் உங்களை உதைக்கவோ பிடித்துத் தள்ளவோ செய்யலாமே?” என்றான். பின்னர் “மிகப் பெரிய ஒரு வாளுடன் வந்தால்? உங்களால் எவ்வளவு பெரிய வாளை ஏந்தமுடியும்?” என்று கேட்டான். “நீ என் வாள் சுழற்சியை பார்த்ததில்லை” என்ற பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்து அறை மூலையில் இருந்த தன் பொதியைச் சுட்டி “அதற்குள் என் வாள் இருக்கிறது, எடு” என்றான். யாமா எழுந்து சென்று அவன் வாளை உருவி எடுத்தான். மிக மெல்லிய வாள் அவன் கையில் நீண்ட தாலப்பனையோலைச் சுவடிபோலிருந்தது. அவன் அதை பிடித்து வளைத்து “இது என்ன கொடி போலிருக்கிறது? காற்றில் வளையுமென்று தோன்றுகிறது” என்றான். “ஆம், இது வளையும் வாள். ஆகவே இதை நம்ரை என்று சொல்கிறார்கள். இது வாள்களில் பெண்” என்றான்.

“வளையும் வாளால் எப்படி வெட்டமுடியும்? இது உடைந்துவிடுமே?” என்றான். “பெண் எதையும் எதிர்கொள்வதில்லை. தவிர்ப்பதே அவள் வழி. நடனமே அவளுடைய போர்” என்றான் பூரிசிரவஸ். “இதை சர்ப்பினி என்றும் சொல்வதுண்டு. பாம்புகள் அனைத்துமே பெண்தான் என்று ஒரு சொல் உண்டு. நீ பாம்பை பார்த்திருக்கிறாயா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இங்கு அவை இல்லை. கதைகளில் வணிகர்கள் சொல்வார்கள் அதைப்பற்றி. தோல் சவுக்கு போலிருக்கும். நீரோடைபோல வளைந்து வளைந்து ஓடும். நாவு அனலால் ஆனது. அதன் வாயில் ஒரு முள் உண்டு. அது நச்சுமுள். அது நம்மீது பட்டால் நாம் இறந்துவிடுவோம். அதன் செவிகள் உள்ளே புதைந்திருக்கும். ஓசைகேட்டு எழுந்தால் இருபக்கமும் செவிமடல்கள் விரியும்” என்றான் யாமா.

“ஓர் எருதை மெல்லிய தொடுகையால் கொன்றுவிடும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அது வளையக்கூடியது தெரிந்துகொள்.” அவன் சொன்னது புரியாமல் யாமா வாளை அவனிடம் நீட்டினான். பூரிசிரவஸ் தன் காலிலிருந்த ஆடையை தள்ளிவிட்டு எழுந்தான். வாளை வாங்கி அதை பிடித்துக்கொண்டான். “என்னை பிடி பார்ப்போம்” என்றான். “உங்களையா?” என்று மைந்தன் கேட்டான். பூரிசிரவஸ் புன்னகையுடன் “ஆம்” என்றான். “நீ என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். எந்தப் படைக்கலத்தையும் பயன்படுத்தலாம்.” யாமா இரு கைகளையும் நீட்டிக்கொண்டு முன்னால் வர பூரிசிரவஸின் வாள் மெல்லிய மூச்சொலியுடன் மும்முறை சுழன்றது. யாமாவின் உடலிலிருந்து அவன் அணிந்திருந்த மென்மயிர் ஆடை முடிச்சுகள் வெட்டுப்பட்டு கீழே சரிந்தது. அவன் திகைத்து நின்றான்.

“உன் உடலில் ஏழு நரம்புகளை நான் இதற்குள் வெட்டியிருக்கமுடியும். நீ இன்னொரு அடியெடுத்து வைக்கமுடியாமல் இங்கேயே விழுந்து இறந்திருப்பாய்” என்றான் பூரிசிரவஸ். “உண்மையில் வெட்டுப்பட்டதேகூட தெரியாது. அலறவும் ஓசையெழாது. உடல் துடிக்கும். அதன் நிகர்நிலை இழப்பதால் பக்கவாட்டில் விழுந்து உடல் இழுத்துக்கொள்ளும். உள்ளே ஓடும் எண்ணமே அறுந்து சொல்துடிக்க அக்கணமே உயிர்பிரியும்” என்றான். “இமைக்கணத்தில் ஏழு இலக்குகளை என்னால் வெட்டமுடியும். என் வாளை எவரும் வெறும்விழிகளால் பார்க்கமுடியாது.”

எண்ணியிராக் கணத்தில் மைந்தன் மீண்டும் பூரிசிரவஸை பிடிக்க வந்தான். சீறலொலியுடன் சுழன்ற வாள் அவன் இடையிலிருந்த பட்டையை வெட்ட இடையாடை கீழே சரிந்தது. சீற்றத்துடன் அவன் கீழே கிடந்த கலங்களை எடுத்து பூரிசிரவஸ்மேல் வீசினான். அவன் உடல் இயல்பாக வளைந்து அனைத்தையும் தவிர்த்தது. யாமா திகைத்து நின்றான். “இதை எப்படி செய்கிறீர்கள், தந்தையே? இது மாயமா?” என்றான். “இது பயிற்சிதான். எந்தப் படைக்கலமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் அதை பழக்குவதில்தான் ஆற்றல்கொள்கிறது. நான் எண்ணுவதை செய்யும்படி இவ்வாளை பழக்கியிருக்கிறேன். ஆனால் படைக்கலம் நம்மால் தேர்ந்தெடுக்கப்படுவது அல்ல. நாம் பிறக்கும்போதே எந்தப் படைக்கலத்திற்குரியவர் நாம் என்பது உடன் முடிவாகி வருகிறது. நாமே அதை கண்டுகொள்கிறோம். நாம் அப்படைக்கலத்தை நம் உடலாகவே உணர்வோம்.”

“எந்தப் போர்க்களத்திலும் எவரையும் நான் வெட்டுவதில்லை. நான் கடந்து செல்லும்போது மெல்லிய வெள்ளி மின்னல்போல இந்த வாள் என்னைச் சுற்றி பறந்துகொண்டிருக்கும். தொலைவிலிருந்து பார்க்கையில் மின்னல் வளையங்களுக்குள் நான் செல்வது போலிருக்கும். என்னை சூழ்ந்திருப்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத எவராலோ உதைத்து வீழ்த்தப்பட்டவர்போல் விழுந்துகொண்டிருப்பார்கள். எவருக்கும் ஒரு சிறு முள்குத்தும் காயத்திற்குமேல் நான் அளித்ததில்லை. பாம்பு கடிப்பது போலத்தான். இறந்தவனைப் புரட்டித் தேடினாலொழிய எங்கு வாள் வெட்டியிருக்கிறதென்று கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் நெஞ்சுக்கும் தலைக்கும் குருதி செல்லும் முதன்மைக் குழாய்களிலொன்றை துண்டித்திருப்பேன்” என்றான்.

யாமா கைகளை விரித்தபின் குனிந்து தன் ஆடையை எடுத்து அதன் பட்டையை பார்த்தான். அது வெட்டுண்டிருக்கும் விதத்தைப் பார்த்து “அது மிகக் கூர்மையான வாள் அல்லவா?” என்றான். “ஆம், எடையைவிட கூர்மை மேல். கூர்மையைவிட விசை மேல். விசையைவிட கோணம் மேலானது. கோணத்தை விட தருணம் முதன்மையானது” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இதை எனக்கு கற்றுத்தாருங்கள், தந்தையே” என்றான் யாமா. “இல்லை, நீ வைத்திருக்கும் அந்த முரட்டு கதையும் வேலுமே உனக்கு போதுமானது” என்றான் பூரிசிரவஸ். “இந்த மலையில் இக்கலை உனக்கு தேவையில்லை.”

யாமா “நான் ஊருக்குள் வந்தால் போரிடவேண்டாமா?” என்றான். “நீ என் ஊருக்குள் வரப்போவதில்லை” என்றான் பூரிசிரவஸ். யாமா சினத்துடன் “நமது குடியின் போரென்றால் நான் கலந்துகொள்ள வேண்டுமல்லவா?” என்றான். “நீ எனது குடியல்ல. நீ உனது அன்னையின் குடியை சார்ந்தவன். மைந்தா, அங்கு நிலத்தில் மனிதர்கள் தங்கள் கைகளாலும் படைக்கலங்களாலும் போரிடவில்லை. தங்கள் வஞ்சங்களாலும் நஞ்சுகளாலும் போரிடுகிறார்கள். அப்போருக்கு நீ ஒருபோதும் இறங்கிவரலாகாது. அவர்கள் எவரும் இங்கு வரமுடியாது. ஆகவே அவர்கள் உங்கள் பகைவர்களும் அல்ல. இங்கிரு, அங்குள்ள எதையும் விழையாதே, அங்குள்ள எதையும் எப்போதும் பெற்றுக்கொள்ளாதே. இது என் ஆணை.” யாமா மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க “என் ஆணை” என்றான் பூரிசிரவஸ். அவன் தலைவணங்கி “ஆம், தந்தையே ” என்றான்.

tigஉணவுக்குப்பின் பூரிசிரவஸ் தன் குளிராடைகளை அணிந்து அதற்குமேல் பிரேமை அளித்த பெருந்தோலாடையை போட்டு உடலை குறுக்கிக்கொண்டு வெளியே இறங்கி தன் புரவியை பார்க்கச் சென்றான். அத்தோலாடை ஒரு கூடாரம்போல் அவன்மேல் கவிந்திருந்தது. உயிருள்ள கரடி ஒன்றை தன் தோளிலிட்டு கைகளைப்பற்றி தூக்கிக்கொண்டு செல்வதுபோல் அவனுக்குத் தோன்றியது. வீசிக்கொண்டிருந்த காற்றில் அத்தோலாடையின் மேலிருந்த மென்மயிர்ப்பரப்புகள் இளம் புல்வெளிபோல அலையடித்தன. காற்று அனைத்து மரங்களையும் யாழின் தந்திகள்போல் அதிரவைத்து ஓலத்தை எழுப்பியது. மலைகளின் மீது வான்திரை இழுத்துவிடப்பட்டிருந்தது.

அவன் சிறிய கதவைத் திறந்து உள்ளே சென்றபோது அங்கு கணப்பின் வெப்பம் இருப்பதை உணர்ந்தான். மூன்று குதிரைகள் ஒன்றுடன் ஒன்று உடல் ஒட்டி அவ்வெப்பத்தில் திளைத்தபடி நின்றிருந்தன. அவனுடைய மணம் பெற்று புரவி அவனை நோக்கி கனைத்தது. அவனைக் காணாது அது உளம் தவித்துக்கொண்டிருந்தது என்று அவன் உணர்ந்தான். அருகே சென்று அதன் கழுத்தையும் தாடையையும் முதுகையும் தடவிக்கொடுத்தான். அது தலைதிருப்பி அவன் கைகளை நக்கியது. பெருமூச்சுவிட்டபடி உடல் சிலிர்த்தது. அதன் வயிற்றை தொட்டுப்பார்த்தான். நன்கு உணவுண்டு நிறைந்திருப்பது தெரிந்தது. வாயிலிருந்து வழிந்த கோழை அது உண்டதை அசைபோட்டுக் கொண்டிருப்பதை காட்டியது. அவன் அதன் நெற்றியையும் மூக்கையும் வருடிக்கொடுத்தான். அதன் விழிகள் உருண்டன. அதன் விலாவிலும் முதுகிலும் தசைகள் விதிர்த்தன. அதனை பற்றிக் கொண்டிருந்த பதற்றம் மெல்ல வடிவதை அவ்வசைவிலிருந்து உணர்ந்தான்.

மீண்டும் மீண்டும் அதை தட்டி ஆறுதலளித்த பின் கதவைத் திறந்து வெளியே சென்றான். அதற்குள் அவன் உடல் முழுக்க குளிர் பரவி நடுக்கு தோன்றிவிட்டது. விரைந்த காலடிகளுடன் இல்லத்தை அடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்றான். யாமா எழுந்து வந்து அவன் மேலாடையைக் கழற்றி எடுத்து உதறி கணப்புக்குச் சற்று அப்பால் மாட்டினான். கணப்பை அணுகி இரு கைகளையும் காட்டி வெம்மையூட்டியபடி பூரிசிரவஸ் அமர்ந்தான். வெளியே அந்திக்கு முந்தைய வெளிச்சமிருப்பதை உணர்ந்து திரும்பிப்பார்த்து “இப்போது பொழுதென்ன?” என்றான். “இரவு எழுந்துவிட்டது” என்றான் யாமா. “ஆனால் வெளியே வெளிச்சமிருக்கிறது” என்றான். “கோடையில் இங்கு இரவு முழுக்கவே வெளிச்சமிருக்கும். பனிப் புயலடிக்கையில் சற்றே இருண்டு மீண்டும் வெளுக்கும்” என்றான் யாமா.

பூரிசிரவஸ் கைகளை உரசியும் உடலை திருப்பியும் தன்னை வெப்பப்படுத்திக்கொண்டு எழுந்தான். “படுத்துக்கொள்ளுங்கள், தந்தையே” என்றான் மைந்தன். “இப்போதுதான் தூங்கி விழித்தேன். மறுபடியும் துயில முடியுமா என்று தெரியவில்லை” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் துயில்வீர்கள். உங்கள் உள்ளத்திற்கு துயில் தேவைப்படுகிறது.” “ஆம், இங்கு என்னுள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் சொல்நிரைகள் நின்றுவிட்டிருக்கின்றன. துவண்டுகிடக்கிறது அகம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அங்கே நிகர்நிலத்தில் நாங்கள் காற்றை சொற்களால் நிரப்பி வைத்துக்கொண்டிருக்கிறோம். சொற்களையே மூச்சாக விட்டு சிந்தையென ஆக்கி அதில் திளைக்கிறோம். உளச்செயல் மலையேறுவதற்கிணையாக களைப்பூட்டுவது.”

“துயிலவிடாதது அதுதான்” என்று யாமா சொன்னான். “இங்குளோர் பெரும்பாலான பொழுதுகளில் துயில்கொண்டுவிடுகிறார்கள். குளிர்காலத்தில் ஒருநாளில் நான்கு நாழிகைப்பொழுதுகூட நாங்கள் விழித்திருப்பதில்லை. மிகுதியாகத் துயில்வதனால் மிகுதியாக வாழ்கிறோம்” என்றான். “துயில்வது என்பது இங்கிலாதாவது மட்டும்தான், தந்தையே. துயிலில் நாம் சென்றடையக்கூடிய இன்னொரு உலகம் இருக்கிறது. அங்கு அனைத்தும் பிறிதொருவகையில் அமைந்துள்ளன. அது மாறா வசந்தகாலம் திகழும் நிலம். எங்கும் மலர்கள் முளைத்து நிறைந்திருக்கும். இனிய பறவைகள்!” கைதூக்கி கண்மூடி தனக்குள் மகிழ்ந்தவனாக புன்னகைத்து “அழகிய பெண்டிர்! அங்கு நாம் முடிவிலாது வாழமுடியும். மனிதர்களுக்கு தெய்வங்கள் இரு உலகங்களை இவ்வாறு படைத்தளித்திருக்கின்றன” என்றான்.

பூரிசிரவஸ் “ஆம்” என்று புன்னகைத்தான். பிரேமை உள்ளிருந்து வந்து அவனிடம் “உங்களுக்கு படுக்கை ஒருக்கியிருக்கிறேன்” என்றாள். அவன் “நன்று” என்று எழுந்துகொண்டான். அவள் முன்னால் செல்ல அவன் பக்கவாட்டில் அந்தச் சிற்றறைக்குள் சென்றான். மரத்தாலான பெட்டி போன்றிருந்தது அப்படுக்கையறை. முன்னர் அவன் படுத்திருந்தது மைந்தனின் படுக்கை என்று தோன்றியது. அது சிறிதாக இருந்தமையால் வெம்மை தங்கியிருந்தது. முகப்பறையிலிருந்த கணப்பிலிருந்து வெங்காற்று வருவதற்கான மண்குழாய் அங்கே வாய் திறந்திருந்தது. கம்பளி மெத்தைக்குமேல் தெய்வங்களின் காப்புக்கென இறகுகளால் ஆன கொத்து ஒன்று தொங்கியது.

அவன் மெத்தையில் படுத்து தன்மேல் மென்மயிர் போர்வையையும் அதற்குமேல் தோல் போர்வையும் எடுத்து போர்த்திக்கொண்டான். உள்ளே கைகளையும் கால்களையும் நடப்பதுபோல் அசைத்து வெம்மையை உருவாக்கினான். பெரிய குடுவையில் நீருடன் பிரேமை அறைக்குள் வந்தாள். அதன் கதவை மூடி தாழிட்டபின் குடுவையை அருகே வைத்துவிட்டு முழந்தாளிட்டு அவனருகே நெருங்கி போர்வையைத் தூக்கி உள்ளே நுழைந்து தன் கைகளாலும் கால்களாலும் அவனை பற்றிக்கொண்டாள். அவன் ஏதும் சொல்வதற்குள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிடத் தொடங்கினாள்.

அவன் அவளை தன் உடலுடன் இறுக கட்டிக்கொண்டான். அவள் காதில் “உன்னைப் பார்த்த கணம் முதல் காமம் கொண்டேன்” என்றான். “ஆம், தெரிந்தது” என்று அவள் சொன்னாள். பின்னர் அவனை வெறிகொண்டவள்போல் முத்தமிட்டாள். தன்மேல் பெரிய துளிகளாக மழை பொழிவதுபோல் அவன் உணர்ந்தான். மெய்ப்பு கொண்டு கைகால்கள் நடுங்க அவளை தழுவினான். அவளுடைய பெரிய உடலை அவனால் வளைத்து அணைக்க முடியவில்லை. அவள் அவன் தலையை எடுத்து தன் மார்புகளுக்கு நடுவே வைத்து புதைத்தபடி அவன் செவியில் “எனக்கு இன்னொரு மைந்தன் வேண்டும்” என்றாள்.

“ஆனால் நான் சற்று முதிர்ந்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். “அதனால் என்ன? நான் விழைகிறேன். என் விழைவு மிகப் பெரியது. அதை தெய்வங்கள் அறியும்” என்று அவள் சொன்னாள். “பிறிதொரு மைந்தன்…” என்று அவன் முகம் தூக்கி அவளைப் பார்த்து சொன்னான். “ஆம், எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும்” என்று அவள் வெறிகொண்டவளாக முனகினாள். பெண்களின் கண்களில் எழும் அந்த வெறியும் மயக்கும் தோன்றின. அவள் வாயில் இனிய பச்சைக்குருதி மணம். தோள்களில் எழுந்த வெம்மைமிக்க தோல்மணம். அவள் மெல்ல மெல்ல இனிய, கட்டற்ற விலங்கென மாறிக்கொண்டிருந்தாள். மிக ஆழமான, மிகமிகத் தனிமையான குகை ஒன்றுக்கு அவனை கவ்விக்கொண்டு சென்றாள்.

முந்தைய கட்டுரைஎழுதழல் – முன்பதிவு
அடுத்த கட்டுரைஓஷோ, ஒரு கடிதம்