‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72

bowதுண்டிகன் பீஷ்மரின் பாடிவீட்டை அடைந்தபோது அதன் நுழைவாயிலில் அமர்ந்திருந்த காவலன் தன் நீள்வேலை ஊன்றி, அதை பற்றி, அந்தக் கைகளின் மேல் முகத்தை வைத்து துயின்றுகொண்டிருந்தான். துண்டிகன் “காவலரே!” என்று அழைத்தான். அக்குரல் அவனை சென்றடையவில்லை. “காவலரே! காவலரே!” என்று அழைத்தபின் மெல்ல அவனை தொட்டான். திடுக்கிட்டு எழுந்து வேலை தூக்கியபின் “யார்? எங்கே?” என்றான் காவலன். “காவலரே, நான் தேர்வலனாகிய துண்டிகன். அரசரின் ஆணைப்படி பீஷ்ம பிதாமகரை பார்க்கும்பொருட்டு வந்தவன்” என்றான் துண்டிகன். “ஆம்! பிதாமகர்!” என்றபின் வாயைத்துடைத்து “யார்?” என்று மீண்டும் கேட்டான் காவலன்.

துண்டிகன் பொறுமையிழக்காது மீண்டும் சொன்னான். அவன் இருமுறை கேட்ட பின்னரே விழி தெளிந்தான். சலிப்புடன் கோட்டுவாயிட்டபடி “பிதாமகர் குடிலுக்குள் துயின்றுகொண்டிருக்கிறார்” என்று சொல்லி அமர்ந்தான். “இல்லை, அவர் அக்குடிலுக்குள் இல்லை” என்று துண்டிகன் கூறினான். “எப்படி தெரியும்?” என்று கேட்டபின் காவலன் ஐயத்துடன் சென்று குடிலுக்குள் எட்டிப்பார்த்து “ஆம், மெய்யாகவே அவர் இல்லை. இவ்வழியாகத்தான் சென்றிருப்பார்” என்றான். “இவ்வழியாகத்தான் சென்றிருப்பார் என்று எனக்கும் தெரியும். எங்கு சென்றார் என்று தங்களுக்கு தெரியுமா என்றுதான் கேட்கிறேன்” என்று துண்டிகன் சொன்னான்.

“இல்லை. நான் இங்கு அமர்ந்திருந்தபோது அவர் அங்கே நடைபயின்று கொண்டிருந்தார். சலிப்பும் சினமும் கொண்டிருந்தார். நான் கேட்ட வினாக்களுக்கெல்லாம் கடுமையாக மறுசொல் கூறினார். ஆகவே நான் இங்கே வந்து அமர்ந்தேன். அதன்பின் நான் சற்று அயர்ந்துவிட்டேன்” என்றான் காவலன். துண்டிகன் அவனிடம் “நீர் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்?” என்றான். “நான் அஸ்தினபுரியின் கோட்டைக்காவலன்” என்றான் அவன். “காவலுக்கு நன்கு பழகியிருக்கிறீர்” என்றபின் துண்டிகன் திரும்பி தன்முன் துயிலில் ஆழ்ந்து இருள் மூடிக்கிடந்த கௌரவப் படையை பார்த்தபடி இடையில் கைவைத்து நின்றான்.

பீஷ்மர் எங்கு சென்றிருப்பார் என்று எண்ணி எடுக்க முயன்றான். அவர் துரியோதனனைப் பார்க்க சென்றிருக்கக் கூடும் என்ற எண்ணம் முதலில் வந்ததுமே அவ்வாறு அல்ல என்று தோன்றியது. அல்லது சகுனியைப் பார்க்க சென்றிருக்கலாம். தன் படைகளை பார்வையிடச் சென்றிருக்கவும் கூடும். பின்னர் அவர் எரிகாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று அவன் உள்ளம் சொன்னது. எரிகாட்டில் அவருக்கு அணுக்கமான எவர் இருக்கிறார்கள்? எவருமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவர் செல்வதற்குரிய இடம் என வேறு எதுவுமில்லை. ஒருவேளை பாண்டவப் படைக்குள் இளைய யாதவரைப் பார்க்க சென்றிருக்கலாம். அவன் அகம் திடுக்கிட்டது. ஏன் அவ்வாறு எண்ணினோம் என வியந்துகொண்டான்.

புரவியை அணுகி அதன் சேணத்தை சீரமைத்து கால்வளையத்தில் பாதத்தை ஊன்றி சுழற்றி ஏறி அமர்ந்தபோது அவனுக்கு தெரிந்தது, அவர் அருகே குறுங்காட்டுக்குள் எங்கோ இருக்கிறார் என்று. குருக்ஷேத்ரக் காடு விரிந்து பரந்தது. முட்செடிகளும் கள்ளிச் செடிகளும் மண்டிக் கிடப்பது. குருக்ஷேத்ரத்தில் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெரும்போர் நிகழுமென்றும், அப்போர் நிகழ்ந்த பகுதி முற்றாகவே கைவிடப்பட்டு மானுடர் நடமாடாமல் தெய்வங்களுக்குரிய காடாக மாறிவிடும் என்றும் அவன் கேட்டிருந்தான். அங்கு எப்படி அவரை தேடிச்செல்வது என்று அவன் உள்ளம் திகைத்தது. அவர் திரும்பி வரும்வரை குடில் முற்றத்தில் அமர்ந்து காத்திருப்பதே சிறந்தது. காட்டிற்குள் சென்றால் வழி தவறிவிடக்கூடும். புலரிக்குள் அவன் பீஷ்மரிடமிருந்து தேர்வலனாக பொறுப்பேற்றுக் கொள்ளும் ஆணையை பெறவேண்டும். அதன் பின்னரே தேரையும் புரவியையும் ஒருக்கவேண்டும்.

அவன் புரவியில் அமர்ந்தபடி தயங்கினான். ஆனால் அவன் உடலிலிருந்து ஆணைகளை பெற்றுக்கொண்டதுபோல் புரவி தலைசிலுப்பி மணியோசையுடன் அடியெடுத்து வைத்து முன்னால் சென்றது. துண்டிகன் பெரும்பாலான தருணங்களில் முடிவுகளை புரவியிடமே விட்டுவிடுவதுண்டு. தன் மீது களைப்பு ஈரமான கம்பளிப்போர்வைபோல விழுந்து அழுத்தி மூடுவதுபோல் உணர்ந்தான். கைகால்கள் எடைகொண்டன. தாடை மெல்ல விழுந்து வாய் திறந்தது. இமைகள் மூடின. அவன் பீஷ்ம பிதாமகரிடம் “வீரசேனர் மறைந்துவிட்டார்” என்றான். “ஆம், தெரியும்” என்று பீஷ்மர் சொன்னார். “அவர் மறையும்போது தங்களிடம் வரும்படி என்னிடம் ஆணையிட்டார்” என்றான். “அதுவும் தெரியும்” என்ற பீஷ்மர் திரும்பி அவனை நோக்கி புன்னகைத்து “வீரசேனனை நான் கொன்றேன். உன்னையும் இன்றே கொல்லவிருக்கிறேன்” என்றார்.

அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். புரவி துயின்றுகொண்டிருந்த கௌரவப் படைகள் நடுவே சீரான குளம்போசையுடன் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கனவில் பீஷ்மர் இருந்த இடம் எது என்று அவன் எண்ணிப்பார்த்தான். அது குறுங்காட்டுக்குள் ஒரு சிற்றோடையின் கரை. உயரமற்ற கள்ளிப்புதர்கள் இருபுறமும் செறிந்திருக்கும் ஒரு பாறை. கனவில் அவன் அவரைத் தேடி அந்தக் காட்டுக்குள் சென்ற வழி மிகத் தெளிவாக நினைவில் எழுந்தது. கள்ளிச்செடிகளை எளிதில் அடையாளம் காணமுடியும். அவை காட்டின் விளிம்பிலேயே தொடங்கி தனிப்பெருக்காக காட்டுக்குள் செல்லும். அவ்வழியிலேயே சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வந்தால் என்ன என்று தோன்ற அவன் புரவியைத்தட்டி விரைவடையச்செய்தான்.

குளம்புகள் ஒலிக்க படை நடுவே ஓடிய புரவி வடமேற்கு எல்லைக் காட்டை அடைந்ததும் தயங்கியது. அங்கிருந்த காவல்மாடத்தில் சிறுத்தையின் சிறுநீரில் நனைக்கப்பட்ட மரவுரிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. புரவி அக்காவல்மாடத்தை அணுகியதும் மிரண்டு, தயங்கி, கனைத்து காவலருக்கு தங்கள் வரவை அறிவித்தது. காவல்மாடத்திலிருந்து வெளிவந்த காவலர்தலைவன் கூர்ந்து நோக்கியபடி அவனை அருகழைத்தான். காவல்மாடத்திலிருந்து இரண்டு அம்புகள் அவனை கூர்வைத்தன. துண்டிகன் காவலனை அணுகி கணையாழியைக் காட்டி “நான் பீஷ்ம பிதாமகரின் அணுக்கனாகிய தேர்வலன். அவரைத் தேடி சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான்.

அவனை நோக்கி குழம்பியபடி “அவர் இங்கு இல்லையே!” என்றான் காவலர்தலைவன். “அப்பால் குறுங்காட்டுக்குள் இருக்கிறார். அவர் இங்கு இருக்கிறார் என்ற செய்தி எனக்கு வந்தது” என்றான் துண்டிகன். “செய்தியா?” என்று காவலர்தலைவன் கேட்டான். “அங்கிருப்பேன் என்று அவர் சொன்னார்” என்று துண்டிகன் சொன்னான். குழப்பத்துடன் மீண்டுமொருமுறை நோக்கிவிட்டு “செல்க!” என்று காவலன் ஒப்புதல் அளித்தான். புரவி மெல்ல தயங்கி காவல்மாடத்தை கடந்ததும் வால்சுழற்றி கனைத்தபடி விரைவு கொண்டது.

குறுங்காட்டுக்குள் செல்வதற்கான ஒற்றையடிப்பாதை உறுதியான செம்மண்ணாலும் சரளைக்கற்களாலும் ஆனதாக இருந்தது. எனவே புரவியால் விரைந்து தாவிச் செல்ல இயன்றது. செல்லச் செல்ல அந்தப் பாதை தனக்கு மிக நன்றாக தெரிந்திருப்பதாகவும், அங்கு பலமுறை வந்திருப்பதாகவும் அவனுக்கு தோன்றியது. ஆனால் சற்று முன் கனவில் மட்டுமே அந்தப் பாதையை கண்டிருக்கிறோம் என்பதை அவன் உள்ளம் உணர்ந்திருந்தது. புரவி செறிகாட்டிற்குள் சென்றதும் இருபுறமும் செறிந்து முட்குலைகளை நீட்டி நின்ற மரங்களால் அதன் விரைவு குறைந்தது. துண்டிகன் தன் உடலை புரவியின் உடலுடன் சேர்த்து வைத்து முட்களிலிருந்து உடலை காத்துக்கொண்டான்.

செல்லச் செல்ல முட்புதர்களின் சூழ்கை அடர்ந்து ஒரு குகைவழிபோல் ஆயிற்று அப்பாதை. முதன் முதலாக செல்லும் வழி சரிதானா என்ற ஐயத்தை அவன் அடைந்தான். கனவில் கண்ட ஒன்றை நம்பி அத்தனை தொலைவு வந்திருக்கலாகுமா? ஆனால் கனவுகள் ஒருபோதும் வீணாவதில்லை. அவை சுற்றுவழிப் பாதைகளாக இருக்கலாம், சென்று சேருமிடம் தெய்வங்களால் வகுக்கப்பட்டது. அவன் மீண்டும் சற்று தொலைவுக்குச் சென்றபோது தெளிவாகவே உணர்ந்தான், அந்த இடம்தான். பின்னர் பீஷ்மர் அருகிருக்கும் உணர்வை அவன் உள்ளம் பெற்றது.

புரவி எடைமிக்க குளம்படிகள் மெல்ல ஒலிக்க தலை தாழ்த்தி புதர்களினூடாக சென்றது. அவரை அணுகிக்கொண்டிருக்கும் உணர்வு எழுந்து வலுத்து வந்தது. பின்னர் அவன் அவரை கண்டான். பீஷ்மர் அவன் அணுகி வருவதை முன்னரே அறிந்திருந்தார். அவர் திரும்பவோ உடலில் அசைவை வெளிக்காட்டவோ இல்லையெனினும் அவனால் அதை உணர முடிந்தது. புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அவரை நோக்கி சென்றான். குரல் கேட்கும் தொலைவில் நின்று “வணங்குகிறேன், பிதாமகரே. அரசரின் ஆணைப்படி தங்களைப் பார்க்கும் பொருட்டு வந்தேன்” என்றான்.

பீஷ்மர் திரும்பாமலேயே “தேர்வலனா நீ?” என்றார். “ஆம்” என்றான். “என் பெயர் துண்டிகன். ஸ்பூடகுலத்தை சேர்ந்தவன்.” பீஷ்மர் “உன் தந்தையை அறிவேன்” என்று சொன்னார். “பிதாமகரே, தங்கள் மாணவரும் தேர்வலருமாகிய வீரசேனர் சற்று முன்னர் விண்புகுந்தார். அப்போது நான் அவருடன் இருந்தேன்” என்றான் துண்டிகன். பீஷ்மரிடம் எந்த மாறுதலும் உருவாகவில்லை.

“அவரைச் சென்று பார்க்கும்படி என்னிடம் இளவரசர் துச்சகர் சொன்னார். அவரது இறப்பை தங்களிடம் அறிவிக்கும்படி ஆணையிடப்பட்டேன்” என்றான். அதற்கும் பீஷ்மர் ஒன்றும் சொல்லவில்லை. “தங்கள் மாணவர்களில் இனி எவரும் உயிருடனில்லை என்ற செய்தியை தாங்கள் உணர்ந்திருப்பீர்கள், பிதாமகரே” என்றான் துண்டிகன்.

பீஷ்மர் வெறுமனே உறுமினார். அவர் ஏதேனும் சொல்லவேண்டுமென்பதற்காக துண்டிகன் காத்து நின்றான். அவரிடமிருந்து நெடுநேரம் சொல்லெழவில்லை. நிழற்சிலையென அசைவிலாது அமர்ந்திருந்தார். சூழ்ந்திருந்த முட்செடிகளும் தளிரிலைகளும் அசைவற்றிருந்தன. துண்டிகன் “நாளை தங்கள் தேரை ஓட்டும் வாய்ப்பு எனக்கு அமையுமெனில் எனது நல்லூழ்” என்றான். “நன்று” என்று அவர் சொன்னார். “பேறு பெற்றேன்” என்று துண்டிகன் தலைவணங்கினான். பீஷ்மர் அவனிடம் “உனக்கு மைந்தர் உள்ளனரா?” என்றார். “ஆம், பிதாமகரே. நான்கு மைந்தர் என் குடியில் உள்ளனர்.”

செல்லும்படி பீஷ்மர் கைகாட்டினார். துண்டிகன் அடிவைத்து பின்னால் வந்து அவரை கூர்ந்து நோக்கியபடி நின்றான். அவர் அங்கு என்ன செய்கிறார் என்று அறிய விரும்பினான். அவர் முற்றிலும் தனிமையிலிருக்கிறார் என்பதை விழி கூறினாலும் அவருடன் பிறர் இருக்கிறார்கள் என்று நுண்ணுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. விழிகளால் காட்டையும் அருகிருந்த மெல்லிய நீரோடையையும் மாறி மாறி பார்த்தான். அவன் அங்கிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரிடமே அங்கு வேறு எவர் இருக்கிறார்கள் என்று கேட்டால் என்ன என்று அவன் எண்ணினான். ஆனால் அது துடுக்கென கருதப்படும் என தோன்றியது.

மீண்டும் அடிவைத்து பின்னால் சென்று புரவியில் ஏறிக்கொண்டான். புரவி திரும்பிச் செல்லும்போது விந்தையானதோர் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அங்கிருந்த அந்த பிறிதொருவர் தன்னை நோக்குவதுபோல. அவன் புரவியை நிறுத்தி திரும்பிப் பார்த்தான். பீஷ்மர் அதே அசைவின்மையுடன் தெரிந்தார். இந்த இரவில் துயிலின்மையால் உளமயக்குகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன். மெய்யையும் பொய்யையும் பிரிப்பது துயில்தான் போலும். துயிலுக்கு அப்பால் அறியாத உலகங்கள் ததும்பிக்கொண்டிருக்கின்றன. இறந்தவர்கள், தேவர்கள், புவிவல்லமைகள். எண்ணங்களின் வடிவில் இயல்பவர்கள்.

அவன் மீண்டும் தன் உடலில் களைப்பை உணர்ந்தான். சற்று நேரம் எங்கேனும் படுத்துத் துயின்றால் போதுமென்று தோன்றியது. அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவன் துயில்வதை அவனே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைகள் தளர்ந்து விழ, கடிவாளம் மடியில் கிடந்தது. துயிலால் எடைகொண்ட தலை முன்னால் சரிந்து புரவியின் கழுத்தில் முட்டியது. கால்களால் புரவியின் உடலை கவ்வியபடி சற்றே சரிந்து துயின்றபடி அவன் சென்றான். முட்களும் கள்ளியிலைகளும் அவனை வருடிச்சென்றன. காட்டுக்குள் கூகைகள் குழறிக்கொண்டிருக்க இலைகளுக்குள் வௌவால்கள் சிறகடித்துச்செல்லும் ஓசைகள் கேட்டன.

அவன் திரும்பிச்சென்று பீஷ்மரிடம் “பிதமாகரே, தாங்கள் இங்கு பேசிக்கொண்டிருந்தது எவரிடம்?” என்றான். அதன் பின்னரே அவருக்கு முன்னால் அந்த ஓடைக்கு மறுபுறம் அதே போன்றதொரு பாறையில் இளைய யாதவர் நிழலுருவாக அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் தலையில் சூடிய பீலி மட்டும் தனி ஒளி கொண்டதுபோல் தெளிவாகத் தெரிந்தது. விழிகளின் இரு ஒளிப்புள்ளிகள். நிழலுருவில் அவர் சிறுவனைப்போல முதுமையற்றவராக தெரிந்தார்.

அவன் தலைவணங்கி கால் வைத்து பின்னால் சென்றபோது அங்கு இனிய குழலோசை எழுவதை கேட்டான். இளைய யாதவர்தான் குழலிசைக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அவரது இடைக்கச்சையில்தான் வேய்குழல் இருந்தது. அந்தக் குழலோசை துயர்கொண்டதாக, கோடைகாலக் குயிலின் தவிப்பு நிறைந்ததாக தோன்றியது. சுழன்று சுழன்று தவிப்பு என்னும் ஒற்றைச் சொல்லையே வெவ்வேறு ஒலியமைப்புகளில் சொல்லிக்கொண்டிருந்தது. பின்னர் அது துள்ளலாயிற்று. கைக்குழவிபோல் காலுதைத்துச் சிரிக்கும் குழலிசை. அது விசைகொண்டது. துள்ளும் புரவியாகியது. மலைச்சரிவில் கனைத்தபடி பாய்ந்திறங்கியது. வெண்ணிற அருவிபோல.

அவன் விழித்துக்கொண்டபோது மீண்டும் படைமுகப்புக்கு வந்திருந்தான். வாயை துடைத்துக்கொண்டு புரவியைத் தட்டி காவல்மாடத்தை நோக்கி அதை செலுத்தினான். அது சிறுத்தைநீர் மணத்தை உணர்ந்து மூக்கை விடைத்து மூச்செறிந்து சிற்றடி வைத்தது. அதை தட்டித்தட்டி ஊக்கி முன் செலுத்தினான்.

bowபடைப்பிரிவை அடைந்ததுமே துண்டிகன் பீஷ்மரின் தேரைச் சென்று பார்த்தான். கௌரவர்களின் படைத்தேர்களிலேயே பெரியது அது. ஆளுயரச் சகடங்களும், உயர்ந்த பீடமும், இரண்டு பின்னிருக்கைகளும், நான்காள் உயரமான முகடும் கொண்டது. ஆனால் மூன்று இரும்புருளைகள்மேல் அதன் அச்சு அமைந்திருந்தமையால் ஓசையின்றி நீரில் படகென ஒழுகுவது. அவன் அடியில் சென்று நோக்கினான். அதன் சகடங்களில் ஒன்றின் உட்புறம் பட்டை சற்று விலகியிருந்தது. எடை தாங்கும் வில்லில் இருந்த மூங்கில்களில் ஒன்று சற்று தளர்ந்திருந்தது. அவற்றை சரிசெய்யும்படி தச்சர்களிடம் சென்று சொன்னான். யவனத்தச்சர்கள் முன்னரே தேரை சரிபார்த்திருந்தனர். அவர்கள் அக்குறைகளை அறிந்திருக்கவில்லை. அவன் குரலில் இருந்த ஆணைக்கு அவர்கள் பணிந்தனர்.

துண்டிகன் புரவிகளை தானே சென்று தெரிவு செய்தான். முன்னரே அத்தேருக்குப் பழகிய புரவிகளே நன்று. ஆனால் ஏழு புரவிகளில் நான்கு மீள முடியாதபடி புண்பட்டிருந்தன. புதிய நான்கு புரவிகளை அழைத்து வந்து அவற்றின் உடலை முழுக்க தன் கைகளால் உருவி சுழிகளைத் தேர்ந்து அவை போருக்கு உகந்த நிலையிலிருப்பதை உறுதி செய்துகொண்டான். அவற்றை பிற மூன்று புரவிகளுடன் சேர்த்துக் கட்டினான். அவை ஒன்றையொன்று நோக்கி மூக்குசுருக்கி மூச்செறிந்து உறுமி உடல் சிலிர்த்தன. அவற்றை ஒரே மூங்கில்கூடையிலிருந்து கொள்ளுண்ணச் செய்தான்.

அவற்றை ஒன்றுடன் ஒன்று அணுகி நிற்கவைத்து அனைத்தையும் ஒரே மரவுரியால் உருவினான். அவற்றுக்குள் ஒரே மணம் உருவானபோது ஒன்றை ஒன்று முகர்ந்து பெருமூச்செறிந்தன. அணுகி உடலொட்டி நின்றன. அவற்றை சேர்ந்து ஓடவிட்டு தேரை நான்குமுறை ஓட்டி பயிற்றுவித்தான். புலரிக்கு முன்னர் அவற்றுக்கு நீர் காட்டி வயிறு புடைக்கும் அளவிற்கு உப்பிட்ட உலர் புல்லை ஊட்டி நிறுத்தினான். அவை ஒற்றைக்கால் தூக்கி நின்றபடி தலைதாழ்த்தி துயிலத் தொடங்கின. போருக்குச் செல்வதற்கு முன் புரவிகளுக்கு வெல்ல உருண்டைகளை அளிப்பதுண்டு. போர் நடுவே வெல்லமும் உப்பும் கலந்த நீர் அவற்றுக்கு அளிக்கப்படும். அவனே சென்று நீரை நோக்கி உறுதிசெய்துகொண்டான்.

கருக்கிருட்டு செறிந்து கொண்டிருந்தபோது அவன் மரவுரியால் தன் உடலைத் துடைத்து புதிய மரவுரி அணிந்து தோற்கச்சை கட்டி கவசங்களை அணிந்துகொண்டான். கையுறைகளை இழுத்துவிட்டு கையில் சவுக்குடன் தேர் அருகே ஒருங்கி நிண்றான். தன் உள்ளம் ஆழ்ந்த நிறைவுகொண்டிருப்பதை உணர்ந்தான். புவியில் இனி ஏதும் எஞ்சியிருக்கவில்லை என்பதுபோல. விழைவதற்கோ எய்துவதற்கோ. அவன் அந்த நிறைவை ஓர் எடையாக உடலெங்கும் உணர்ந்தான்.

புரவிகள் விழித்தெழுந்தன. அவற்றிலொன்று அவனை அழைத்தது. அவன் எழுந்துசென்று அவற்றுக்கு மீண்டும் நீர் வைத்தான். அவை சிறுநீர் கழித்து சாணியுருளைகள் பொழிந்து ஒன்றை ஒன்று முகர்ந்து அடையாளம் கண்டுகொண்டபின் குளம்புகள் மிதிபட கால்களை தூக்கி வைத்தன. ஈரப்புல் கற்றைகளை வைத்தபோது தலைகுலுக்கியபடி புல்லை தின்னத் தொடங்கின. அவற்றின் தாடைகள் இறுகி அசைவதை, வால் சுழல்வதை, உடல் விதிர்ப்பதை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவையும் தானுணர்ந்த அந்த நிறைவை கொண்டிருப்பதாகத் தோன்றியது.

பீஷ்மர் வருவதற்காக அவன் காத்திருப்பதை உணர்ந்த காவலன் “நேற்று இங்கிருந்து அவர் செல்கையில் நான் பார்த்தேன். ஆனால் அவர் செல்கிறார் என்பது எனக்கு தோன்றவில்லை. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றான். சீற்றத்துடன் திரும்பிய துண்டிகன் “இனி ஒரு சொல் உமது நாவில் எழுமென்றால் சூதனின் எல்லைகடந்து இந்தத் துரட்டியால் உமது கழுத்தை நான் அறுக்கவேண்டியிருக்கும்” என்றான். காவலன் வெறித்து நோக்கியபின் மீண்டும் சென்று தன் சிறுபீடத்தில் அமர்ந்தான். துண்டிகன் அமர்ந்து கைகளை கோத்துக்கொண்டான்.

மெல்ல உடலும் உள்ளமும் அடங்கியபோது அந்தச் சினம் ஏன் என துண்டிகன் வியந்துகொண்டான். அச்சிறுமையாளன் அரிய ஒன்றை கலைத்து ஊடுருவினான் என்பதனாலா? அல்ல, அவனைப் போன்றவர்கள் பிறிதொரு உலகில் வாழ்பவர்கள். அவர்கள் நாணல்கள்போல, புயலுக்குப் பின்னரும் எஞ்சுபவர்கள். ஆம், அதுதான். இவன் எஞ்சியிருப்பான். புரவியின் காலடிகள் ஒலிப்பதைக் கேட்டு துண்டிகன் செவி கொண்டான். பீஷ்மரின் புரவி அது என்பதை எந்த முன்னறிதலுமின்றி அவன் உள்ளம் உணர்ந்தது.

அவன் எழுந்து நின்றான். துள்ளலுடன் வந்த புரவி அணுகி திரும்பி நிற்க பீஷ்மர் இறங்கி வந்தார். அவரது உடலில் இருந்து ஒளி எழுந்து பரவுவதாக தோன்றியது. கருக்கிருள் எங்கும் சூழ்ந்திருந்தபோது மிகத் தெளிவாக அவரை பார்க்க இயன்றது. தவத்தில் நிறுவிக்கொண்ட முனிவர்களின் உடலில் தன்னொளி உண்டென்று அவன் கேட்டிருந்தான். இரவில் துயிலும்போது விளக்கு ஏற்றிவைக்கப்பட்ட படிகக்கலம் என அவர்களின் உடல் துலங்கும் என்பார்கள். அது மெய்தான். அல்லது தன் விழிமயக்கா?

பீஷ்மர் அவனை அணுகி புன்னகைத்து “நன்று, சித்தமாகிவிட்டாய்” என்றார். “ஆம், ஆசிரியரே” என்றான் துண்டிகன். “சற்று நேரம். நானும் ஒருங்கிவிடுவேன்” என்று பீஷ்மர் சொன்னார். துண்டிகன் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம், ஆசிரியரே” என்றான். “நெடுநாள் ஓய்வெடுத்துவிட்டேன். இன்னும் சிறு பொழுதுதான்” என்றபடி பீஷ்மர் உள்ளே சென்றார். அவருக்கு உதவும்பொருட்டு செல்வதா வேண்டாமா என்று தயங்கியபடி துண்டிகன் நின்றான். பின்னர் சவுக்கை கீழே வைத்துவிட்டு பீஷ்மரை அணுகினான்.

பீஷ்மர் மரவுரியால் தன் உடலை துடைத்துக்கொண்டிருந்தார். அவன் அருகே சென்று அந்த மரவுரியை வாங்கும் பொருட்டு கைநீட்டினான். “தொட வேண்டாம்” என்று பீஷ்மர் சொன்னார். “பிழை பொறுக்கவேண்டும்” என்று பதறி அவன் கையை பின்னிழுத்துக்கொண்டான். அவர் நிமிர்ந்து நோக்கி “என்னை இப்போது எவரும் தொடலாகாது” என்றார். அவர் சொல்வதென்ன என்று அவனுக்கு புரியவில்லை. அவர் பீஷ்மர்தானா கந்தர்வர்கள் எவரேனும் அவ்வடிவில் வந்திருக்கிறார்களா என்ற ஐயத்தை அவன் அடைந்தான்.

பீஷ்மர் எழுந்து தன் மரவுரி ஆடையைத் துறந்து சிறிய மூங்கில்பேழையிலிருந்து புதிய மரவுரி ஒன்றை எடுத்து அணிந்தார். புதிய இடைக்கச்சையையும் கையுறைகளையும் அணிந்தார். புதிய தோல்நாடா ஒன்றை எடுத்து குழலை மரச்சீப்பால் நீவி கட்டினார். அவனிடம் “அந்தப் பெட்டியில் இருந்து என் குறடுகளை எடு” என்றார். அவன் பனையோலைப்பெட்டியைத் திறந்து அதிலிருந்து புத்தம்புதிய இரும்புக்குறடுகளை எடுத்து வைத்தான். அவர் பீடப்பெட்டியில் அமர்ந்து அதை தன் கால்களில் அணிந்துகொண்டார். கவசங்களும் புதியனவாக இருக்குமோ என அவன் எண்ணினான். அவர் கைசுட்டி “உம்” என்றார். அந்தப் பெட்டியில் அவருடைய கவசங்கள் உலையிலிருந்து அப்போதுதான் வந்தவை போலிருந்தன. அவர் அவற்றை அணிந்துகொண்டு எழுந்தபோது முதல்நாள் போருக்கெழுந்தவர் போலிருந்தார்.

அவருடைய வில்மட்டும் மாறவில்லை. அதை எடுத்து ஒருமுறை வளைத்து நோக்கியபின் “நான் சித்தமாகிவிட்டேன்” என்றார். அவர் முகம் அவன் அதுவரை கண்டிராத புன்னகையுடன் இருந்தது. எண்ணி எண்ணி மகிழும் எதையோ நெஞ்சுள் கொண்டவர்போல விழிகள் ஒளிகொண்டிருந்தன.

முந்தைய கட்டுரைபாண்டிச்சேரி வெண்முரசு விவாதக்கூட்டம்-நவம்பர்
அடுத்த கட்டுரைஉள்ளத்துடன் உரையாடுதல்