‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–47

பகுதி நான்கு : அலைமீள்கை – 30

பிரத்யும்னனின் இளையவர்கள் அமர்ந்திருந்த சிற்றறை நோக்கி நான் ஓடினேன். அதன் வாயிலிலேயே என்னை கைநீட்டி தடுத்தபடி காவலர்கள் வந்தனர். “நான் உடன்பிறந்தாரை சந்திக்கவேண்டும், உடனடியாக இப்போதே” என்றேன். “அவர்கள் சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போது எவரையும் சந்திப்பதில்லை” என்று காவலர்தலைவன் சொன்னான். “சந்தித்தாகவேண்டும். உடனே இப்போதே” என்று நான் மீண்டும் கூறினேன். ”இத்தருணத்திலேயே சந்தித்தாகவேண்டும்” என்று கூவினேன். “இது துவாரகையை ஆளும் மூத்தவர் ஃபானுவின் ஆணை. மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்.”

இன்னொரு அகவை முதிர்ந்த காவலர் “சற்று பொறுங்கள். நான் சென்று சொல்லிவிட்டு வருகிறேன்” என்றார். அவர் அறைக்கதவை திறந்து உள்ளே செல்வதற்குள் ஒரு கணத்தில் என் முன்னால் நின்றிருந்த காவலனைப் பிடித்து தள்ளிவிட்டு அவரை முன்னால் உந்தித் தள்ளி உள்ளே சென்று நான் கதவை தாழிட்டேன். தள்ளப்பட்ட முதிய காவலர் சென்று நிலத்தில் விழுந்து எழுந்தார். உள்ளிருந்த சாருதேஷ்ணனும் பரதசாருவும் சாருவும் எழுந்து நின்றனர். சாருதேஷ்ணன் வாளை தொட்டார். நான் “பொறுங்கள். ஒருகணம் நான் சொல்லெடுக்கிறேன். அதன்பொருட்டே இங்கு வந்திருக்கிறேன்” என்றேன்.

“நாங்கள் எவரிடமும் பேசுவதற்கு ஒருக்கமில்லை. இத்தருணத்தை நாங்கள் கடந்தாகவேண்டும்” என்றார் சாருதேஷ்ணன். “நான் இங்கு நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்தேன். என்ன நிகழ்ந்ததென்று மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன்” என்றேன். “என்ன நிகழ்ந்தது என்று ஆய்ந்துகொண்டிருக்க இப்போது பொழுதில்லை. சுதேஷ்ணன் தனக்கு எதிரான சூழ்ச்சி ஒன்றை அமைத்திருந்தார் என்பது பிரத்யும்னனுக்கு தெரிந்துவிட்டது. அவருடன் எவரெவர் இருந்தார் என்பதே அவருக்கு தெரியவேண்டியது. நாங்கள் அவருடன் இருந்தோம் என்பதை எங்களால் மறைக்க முடியாது. அவருக்குத் தெரியும் என்பது அவர் அந்தச் சொல்சூழ்கையில் எங்களை சேர்த்துக்கொள்ளவில்லை என்பதிலேயே தெரிகிறது. ஆகவே அவருடைய படைகள் எத்தருணமும் வந்து எங்களை சிறைசெய்யக்கூடும். தலைவெட்டி வீழ்த்தவும் வாய்ப்புண்டு. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றான் சாரு.

“நான் கூறுவதை சற்று கேளுங்கள்” என்றேன். “கூறுக!” என்றார் சாருதேஷ்ணன். அதற்குள் பரதசாரு முந்தி வந்து ”எங்களுக்கும் படைவல்லமை இருக்கிறது. எங்களை ஆதரிக்கும் ஷத்ரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேசுகிறோம். இந்த அசுரக்குடி மைந்தனுக்கு முடிசூட்டும்பொருட்டா ஷத்ரியர்கள் இங்கே படைகொண்டு நின்றிருக்கிறார்கள்? களங்களை வென்று உயிர்கொடுத்து அவர்கள் போரிடுவது ஷத்ரியர்கள்மேல் அசுரக்கோல் நிலைகொள்வதற்கா என்று அவர்களை கேட்கிறேன். ஷத்ரியர்களை மீறி பிரத்யும்னன் எதுவும் செய்துவிடமுடியாது” என்றான்.

“நான் சொல்கிறேன். ஓசையிடவேண்டாம். நான் பேசுகிறேன்” என்றேன். “சொல்” என்று சாருதேஷ்ணன் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் கொந்தளித்துக்கொண்டிருந்தனர். எந்தக் கணமும் அவர்களின் அறைக்கதவை உடைத்துக்கொண்டு பிரத்யும்னனின் படைகள் உள்ளே வந்துவிடுமென்று அவர்கள் அஞ்சுவது தெரிந்தது. “இத்தருணத்தில் நீங்கள் அஞ்சுவதுபோல பிரத்யும்னன் நிலையழிந்து நடந்துகொள்ளவே வாய்ப்பு மிகுதி. அவர் சுதேஷ்ணனை கொல்லவில்லை என்றால் இவையனைத்தையும் பிறிதொன்றாக கருதலாம். ஆனால் தன் கையில் குருதிபட்ட பிறகு இனி அவர் தவிர்க்கப் போவதில்லை. உறுதியாக பிரத்யும்னனை நாம் எதிர்கொண்டாகவேண்டும். சுதேஷ்ணனை ஆதரித்த அனைவரையும் அவர் வாழவிடமாட்டார்.”

பரதசாரு “அவரிடம் சென்று பேசினாலென்ன என்று எண்ணிக்கொண்டிருந்தோம். எவ்வண்ணம் பேசுவது என்பதைப்பற்றித்தான் இங்கு சொல்சூழ்ந்து கொண்டிருந்தோம்” என்றான். “எதை பேசுவீர்கள்? சுதேஷ்ணனுக்கு நீங்கள் அளித்த ஆதரவு பொய் என்றா? அல்லது அந்த ஆதரவு மெய், இன்று அஞ்சி பிரத்யும்னனுக்கு மீண்டும் ஆதரவு தெரிவிக்கப்போகிறோம் என்றா? அதை அவர் நம்புவாரா? அத்தகைய ஒரு தரப்பை அவர் தன் முடிக்கு கீழே விட்டுவைப்பாரா?” சாரு “நாங்கள் ஒன்றும் தனித்தவர்கள் அல்ல. எங்களுக்கும் படைவல்லமை உள்ளது” என்றான்.

“இது அறிவின்மை. படைவல்லமை இருப்பது உங்களைக் கொல்வதற்கு இன்னும் தெளிவான அடிப்படையை அவருக்கு அளிக்கிறது. நீங்கள் படைவல்லமை அற்றவர்கள், எதுவுமே செய்ய இயலாதவர்கள் என்றால் ஒருவேளை உங்களுக்கு அவர் உயிர்க்கொடை அளிக்கக்கூடும். ஆனால் உங்களால் ஷத்ரியர்களை தூண்டிவிட முடியும் என்றும் ஷத்ரியர்களிடம் பேசுவதற்கு உங்களிடம் வலுவான குரல் ஒன்றுள்ளது என்றும் உணர்ந்தால் அவர் எவ்வகையிலும் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். உங்களை அழித்து வென்றுநிற்க வேண்டுமென்றே அவர் விரும்புவார்” என்றேன்.

சாருதேஷ்ணன் தளர்ந்து “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “உங்களுக்கு பிற மைந்தரின் ஆதரவு இருக்கிறதா என்பதுதான் இப்போது உங்களை வாழவைப்பது. உங்கள் ஷத்ரிய குடியின் ஆதரவல்ல நீங்கள் நாடவேண்டியது. நீங்கள் மூத்தவர் ஃபானுவை அடைக்கலம் புகுங்கள்” என்றேன். சாருதேஷ்ணன் “நாங்கள் அங்கு வந்தால்…” என்றபின் ”நாங்கள் அங்கு வந்தால் பிரத்யும்னனுக்கும் ஃபானுவுக்கும் பூசல் எழும்” என்றார். “அவ்வாறல்ல, ஃபானுவிடம் மூத்தவர் என்ற நிலையில் வந்து காலில் விழுங்கள். மூத்தவரே, எங்களை காப்பாற்றுங்கள் என்று நீங்கள் பணிந்து சொல்லும்போது ஃபானு உங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் பிரத்யும்னனிடம் பேசுவார்.”

“மெய், பிரத்யும்னனின் ஆதரவை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஆனால் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொடுப்பார். இங்கிருந்து நீங்கள் உயிருடன் வெளியே செல்வதற்கு ஒரு வழியை அவர் திறந்துகொடுப்பார்” என்றேன். “குறைந்தது இந்நகரில் இருந்து நாங்கள் சென்றுவிட்டால் போதும். நாங்கள் எவ்வகையிலேனும் விதர்ப்பத்திற்கு சென்றுவிட்டால் போதும்” என்றார் சாருதேஷ்ணன். “விதர்ப்பத்திற்கு நீங்கள் செல்ல இயலாது. விதர்ப்பம் பிரத்யும்னனுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கே வாய்ப்பு மிகுதி” என்றேன். பரதசாரு “எப்படி?” என்றான். “அவர் சுதேஷ்ணனுடன் மிக நெருக்கமாக இருந்தார்.”

நான் “ஆனால் அவர் கையால் விசாரு கொல்லப்பட்டிருக்கிறான்” என்றேன். “ஆகவே அவர் பிரத்யும்னனை அடைந்தே தீரவேண்டும். பிரத்யும்னனின் ஆதரவு இல்லையென்றால் ருக்மியால் விதர்ப்பத்தை ஷத்ரியர் நடுவே ஒரு தனி நாடென நிலைநிறுத்த இயலாது. ருக்மியின் ஆதரவு இல்லாவிட்டால் பிரத்யும்னன் இந்நகரில் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவரல்ல. ஆகவே அரசுசூழ்தல் என்ற முறையில் அவர் ஒருபோதும் ருக்மியை கைவிடப் போவதில்லை. ருக்மியும் அவரை கைவிடப் போவதில்லை.” சாருதேஷ்ணன் “ஆம், அதற்கான வாய்ப்புகள் உள்ளன, அனைவரும் நாடுவது அரசையே” என்றார்.

“நீங்கள் ருக்மியை சென்றடைவது இடரை அழைப்பது. பிரத்யும்னன் அவ்வாறு ருக்மியை கைவிடுவார் என்றால் ருக்மி செய்வதற்கு ஒன்றே உள்ளது. உங்களை பிரத்யும்னனிடம் கையளித்து தன் நேர்மையையும் தன் பணிவையும் அறிவித்துக்கொள்வது” என்றேன். “என்ன செய்வதென்றே தெரியவில்லை, என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றபடி பரதசாரு எழுந்தான். “இந்த எந்த சூழ்ச்சியிலும் நான் இடம்பெறவில்லை. நான் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தேன். நான் பிரத்யும்னனுக்கு அணுக்கமானவனாக இருந்தேன். என்னை பேசிப் பேசி இங்கு இழுத்தார்கள். எனக்குள் விழைவை மூட்டினார்கள். என்னை இவர்கள் தென்திசைக்கு பொறுப்பாக்குவதாக சொன்னார்கள்” என்றான்.

நான் அவனைப் பார்த்து “அதைவிட நீ விழைந்தாய், இளையோனே” என்றேன். “ஒருநாள் துவாரகையின் முழுமுடியையும் நீயே சூடிக்கொள்ள வாய்ப்பு அமையும் என்றும் அதுவரை சுதேஷ்ணனிடம் அணுக்கமாகி உடன் இருப்பதாக நடிக்கவேண்டும் என்றும் எண்ணினாய்” என்றேன். “இல்லை இல்லை…” என்று அவன் கூவினான். நான் உரக்க “அவ்வண்ணமே நினைத்தாய், அதில் எந்த ஐயமும் இல்லை. சுதேஷ்ணன் முடிசூடட்டும். ஃபானுவையும் பிரத்யும்னனையும் அவர் தோற்கடிக்கட்டும். அதன்பிறகு சுதேஷ்ணனை நீ வெல்லலாம் என்று எண்ணினாய்” என்றேன். “இல்லை” எனும்போது அவன் குரல் தழைந்தது. “ஐயமே இல்லை, நீ அவ்வாறுதான் எண்ணினாய்” என்றேன்.

பரதசாரு ”ஆம், அவ்வாறுதான் எண்ணினேன். பித்தன்போல் எண்ணினேன். கீழ்மகன்போல் எண்ணினேன். அதற்காகத்தான் இன்று இதோ பழிசுமத்தப்பட்டு நின்றிருக்கிறேன். என் தலை இந்த மண்ணில் உருளப்போகிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அழியப்போகிறேன். அழிவதைத் தவிர எனக்கு வேறெந்த முடிவும் கண்ணுக்குத் தெரியவில்லை” என்று கூறிவிட்டு தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு அழுதபடி நிலத்தில் அமர்ந்தான். பிறர் அவனை வெறித்து நோக்கியபடி நின்றனர்.

நான் அவனை நோக்கி “ஃபானுவை சென்றடைக! ஃபானுவிடம் உதவி கோருக! நாங்கள் இந்நகரத்தைவிட்டு வெளியே செல்கிறோம் என்று அவரிடம் கூறுக! நகரிலிருந்து வடபுலம் நோக்கி செல்க! கூர்ஜரமோ அல்லது பிற ஏதேனும் நாடோ. எங்கேனும் உங்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ஒரு ஷத்ரிய நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே இருந்துகொண்டு இங்கிருக்கும் ஷத்ரியர்களை சிறிது சிறிதாக அங்கே சேர்த்துக்கொள்ளுங்கள். அங்கே ஒரு படையை திரட்டிக்கொண்டீர்கள் என்றால் பிறகெப்போதேனும் நீங்கள் பிரத்யும்னனிடம் வந்து பேசமுடியும். உங்களுக்கான உரிமையை எங்கேனும் கேட்டு பெறமுடியும். இத்தருணத்தில் உயிருடன் இருப்பதே உங்களுக்கான அறைகூவல்” என்றேன்.

“ஆம், உயிர்… அதுவன்றி பிறிதெதையும் இப்போது நாங்கள் நாடவில்லை” என்றார் சாருதேஷ்ணன். ”எனில் வருக! உடனடியாக நாம் சென்று ஃபானுவை பார்ப்போம். என்னுடன் எழுக!” என்றேன். சாரு “ஆனால் நாங்கள் இந்த அரண்மனை விட்டு வெளியே செல்ல முடியாது. இந்த அரண்மனை முற்றாகவே பிரத்யும்னனின் படைகளால் சூழப்பட்டிருக்கிறது” என்றான். “ஆம், நான் அதை அறிவேன். ஆனால் நான் ஃபானுவின் தூதன். அவர் அளித்த அரசமுத்திரை மோதிரத்துடன் இங்கு வந்திருக்கிறேன். என்னை இங்கு சிறையிட அவர்களால் முடியாது. அது ஃபானுவின் எதிர்ப்பை ஈட்டிக்கொள்வதாகும். நான் அன்றி நீங்கள் இந்த வளையத்திலிருந்து வெளியே செல்லமுடியாது என்பதை உணருங்கள்” என்றேன்.

“ஆம், உணர்கிறோம். வருகிறோம்” என்றார் சாருதேஷ்ணன். நான் அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். இடைநாழியினூடாக நடக்கையில் நான் ஐயம் கொண்டிருந்தேன். இத்தருணத்தில் பிரத்யும்னன் செய்வதற்கு ஒன்றே உள்ளது. அவர் கையில் குருதி படிந்துவிட்டது. அக்குருதிக்கு அவர் தெய்வங்களிடம், குடிகளிடம், உடன்பிறந்தாரிடம் ஈடு சொல்லியே ஆகவேண்டும். அதை ஈடுகட்டுவதற்கு ஒரே வழி சுதேஷ்ணன் இயற்றியது என்ன என்பதை மேலும் மேலும் பெரிதாக்குவது. பொறுத்துக்கொள்ள இயலாத ஒன்றாக மாற்றுவது. அதை செய்ய வேண்டுமெனில் முதலில் சுதேஷ்ணனையும் சுதேஷ்ணனுடன் இணைந்த இவர்களையும் கொன்றுவிடவேண்டும். எவ்வகையிலும் இப்பகையை எஞ்சவிடலாகாது.

இங்கிருந்து வெளியே சென்றால் இவர்கள் மக்களிடம் இரக்கத்தை ஈட்டிக்கொள்வார்கள். பிரத்யும்னனுக்கு பெரும்பழியையே திரட்டி வைப்பார்கள். சுதேஷ்ணனின் கொலையை பயன்படுத்திக்கொண்டு பிரத்யும்னனுக்கு எதிராக குடிகளின் பகையையும் அச்சத்தையும் பெருக்கிக்கொள்வதே இவர்கள் தங்கள் இடத்தை ஈட்டிக்கொள்வதற்கான வழியாக அமையும். ஆகவே அரசுசூழ்தலின் நெறிகளின்படி அவர் இவர்களை எந்நிலையிலும் வாழ விடமாட்டார். இந்த அரண்மனை இதற்குள் முற்றாக சூழப்பட்டிருக்கும். இங்கிருந்து வெளியே செல்ல எவரையும் விடப்போவதில்லை.

நான் அத்தருணத்தில் முற்றிலும் நம்பிக்கையிழந்திருந்தேன். ஆயினும் அனைத்து முடிவுகளையும் எடுத்துவிட்டவன் போலவும் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் போலவும் உறுதியாக அடிகள் வைத்து சென்றேன். எனது தோற்றத்தை நம்பி அவர்கள் பதறியபடியும் விம்மியபடியும் எனக்குப் பின்னால் வந்தனர். இடைநாழியினூடாக நடந்து படிகளினூடாக இறங்கி கூடத்திற்கு வந்தபோது அங்கே நின்றிருந்த காவல்வீரர்கள் வாட்களை உருவியபடி எங்களை தடுத்தனர். அவர்கள் தலைவன் முன்னால் வந்து “நில்லுங்கள், இங்கிருந்து எவரும் வெளியே செல்ல முடியாது. பிரத்யும்னனின் ஆணை” என்றான்.

நான் எனது முத்திரை மோதிரத்தை தூக்கிக்காட்டி உரக்க “நான் இந்நகரை ஆளும் ஃபானுவின் இளையோன். இந்நகரை ஆளும் தலைவன் ஆணைப்படி இவர்களை அழைத்துச்செல்கிறேன். என்னை தடுப்பவர் எவர்?” என்றேன். “இந்நகரில் இன்று எவரும் முழுதாக முடிசூட்டிக்கொள்ளவில்லை. எங்கள் அரசர் இப்போதும் பிரத்யும்னன்தான். அவருடைய ஆணையையே நான் நிறைவேற்ற முடியும்” என்று காவலர்தலைவன் சொன்னான். “எந்நிலையிலும் இங்கிருந்து எவரையும் நான் வெளியே செல்ல ஒப்ப இயலாது. படைக்கலங்களை கீழே வீழ்த்தி கைகளைத் தூக்கி முழந்தாளிடுக! சிறைப்படுக!”

“என்னை தடுப்பவர் எவர்? பேரரசர் ஃபானுவின் ஆணையை மீறுபவர் எவர்? எனில் மீறுங்கள் பார்க்கலாம்” என்றபடி அந்த முத்திரை மோதிரத்தை தூக்கிக்காட்டியபடி நான் முன்னால் நகர்ந்தேன். “இவர்களை அழைத்து வரும்படி ஃபானுவின் ஆணை. அந்த ஆணையை மறுப்பது தங்கள் தலைகளை பலிபீடத்தில் வைப்பதேதான். உணர்க, இத்தருணம் ஒரு போருக்குரியது என்று உணர்க! போரில் ஒவ்வொருவரும் தங்கள் தலையைத்தான் முன் வைக்கிறார்கள்” என்றேன்.

“இளவரசே, எந்நிலையிலும் என் அரசர் பிரத்யும்னனின் ஆணையை நான் மீறப்போவதில்லை. தாங்கள் எவரும் இங்கிருந்து வெளியே செல்லமுடியாது” என்று கூறி அவன் வாளை உருவினான். நான் “என் தலையை வெட்டு. நான் இங்கிருந்து செல்லாமல் இருக்கபோவதில்லை. ஏனெனில் இது எனது மூத்தவரின் ஆணை” என்றபடி என் வாளை உருவி முன்னால் சென்றேன். “வேண்டாம் நில்லுங்கள் பொறுங்கள்” என்று அவன் கூவினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றோம். பிறகு நான் ஓங்கி வெட்டியபடி முன்னால் சென்றேன். அவன் ஒருகணம் தயங்கி பின்னடைந்தான்.

சிறுவழி உருவானால் கூட அதனூடாக அவர்களை இட்டுச்செல்ல முடியுமென்று எண்ணினேன். அத்தருணத்தில் என் கால் சற்றே வழுக்கியது. என் தலை சுழன்றது. காட்சிகள் அனைத்தும் அதிர்ந்து சற்றே நெளிந்தன. நான் வாளை உருவி ஊன்றி தயங்கி நின்றேன். என்னுள் உடல்நீரில் ஓர் அலை எழுந்தடங்கியது. என் அகத்தே ஓடிய எண்ணப்பெருக்கும் சொல்கலங்கி சுழிப்பு கொண்டது. தன்னுணர்வு அடைந்தபோது என் உடலெங்கும் வியர்வை எழுந்திருந்தது. நான் களைத்திருந்தேன். என் உள்ளம் அதன் தாங்கெல்லையை கடந்திருக்கலாம்.

ஆனால் என்னைச் சுற்றி அத்தனை பேருமே கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை கண்டேன். நகருக்குள்ளிருந்து பெரும் ஓசை எழுந்து சாளரங்களினூடாக உள்ளே வந்தடைந்தது. எங்கும் ஓலங்கள். பலர் ஓடும் ஓசைகள். மரப்படிகளிலும் பளிங்குப்படிகளிலும் காலடிகள் விழும் முழக்கங்கள். வெளியிலிருந்து ஒரு வீரன் உள்ளே ஓடிவந்து ”நிலநடுக்கம். நிலம் நடுங்கியிருக்கிறது” என்றான். ”எங்கு? யார்?” என்று கேட்டபடி என்னைத் தடுத்த காவலர்தலைவன் வெளியே ஓடிப்போனான். “வருக! வருக!” என்று நான் சாருதேஷ்ணனையும் இளையவர்களையும் நோக்கி சொல்லிவிட்டு ஓடினேன்.

“வெளியே வருக! என்னை தொடர்ந்து வருக!” என்று கூறியபடியே வெளியே ஓடினேன். உள்ளிருந்தும் ஏராளமான படைவீரர்கள் படிகளிலிருந்தும் இறங்கி ஓடி வந்தனர். “நிலநடுக்கம்! நிலம் நடுங்கியிருக்கிறது!” என்று ஒருவன் கூவினான். என்னைத் தொடர்ந்து வந்த சாரு “நான் குமட்டலெடுத்தேன், தலைசுழன்றது. என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை” என்றான். பரதசாரு ”சுவர்களில் மாட்டப்பட்டிருந்த படைக்கலங்களும் பொருட்களும் அசைந்துவிட்டிருந்தன” என்று சொன்னான். “நிலம் நடுங்கியிருப்பது உண்மைதான்” என்று நான் சொன்னேன். “அது நன்று, நாம் தப்ப வாய்ப்பு கிடைத்தது.”

“என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை. இங்கிருந்து தெய்வங்கள் கிளம்பிச்செல்கின்றன. தெய்வங்கள் இந்நகரை கைவிடுகின்றன” என்று அப்பால் ஒரு காவலன் கூவினான். ”பேரழிவு அணுகியிருக்கிறது. இந்நகர் கடலின் இரு உள்ளங்கைமேல் அமைந்துள்ளது என்பதை மறக்காதீர்கள். இதை ஏந்தியிருக்கும் பெரும்பாறைகளில் ஒன்று அசைகிறது” என்று வேறு ஒருவன் கூறினான். ”இந்நகரமே உடைந்து விழப்போகிறது. கட்டடங்கள் ஒன்றின்மேல் ஒன்று விழப்போகின்றன” என்று இன்னொருவன் கூவினான்.

“இது நகரா என்ன? ஒன்றுக்குமேல் ஒன்றென கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். உச்சியிலிருக்கும் ஒரு மாளிகை இடிந்துவிழுந்தால் அனைத்துக்கும் மேலே அது விழுந்துவிடும். வானிலிருந்து விழுவதுபோல” என்று ஒரு குரல். “ஒவ்வொரு மாளிகையும் இன்னொரு மாளிகையின் தலைமேல் அமர்ந்திருக்கும் இது போன்ற ஒரு நகரம் நிலநடுக்கத்தில் மிக மிக அழிவை அளிப்பது” என்று இன்னொரு குரல். அந்தப் பதற்றத்திலும், அவ்வாறு ஓடிக்கொண்டிருக்கையிலும் எத்தனை தெளிவாக சொற்களை கேட்கிறேன்! இடர்களில் புலன்கள் பல மடங்கு கூர்கொள்கின்றன.

“வெளியேறுங்கள்! கட்டடங்களை விட்டு வெளியேறுங்கள்!” என்று யாரோ எங்கோ கூவிக்கொண்டிருந்தார்கள். மேலிருந்து ஏவலர்கள் பெருந்திரளாக வந்து எங்களைக் கடந்து சென்றனர். ஒவ்வொருவரும் மிரண்ட கன்றுக்கூட்டங்களை போலிருந்தனர். நான் திரும்பி “இவர்கள் நடுவே நாம் செல்வோம். இவர்களைத் தடுக்க எவராலும் இயலாது. நாம் வெளியே சென்றுவிடுவோம். இப்போது நாம் முற்றத்தை சென்றடைந்தாக வேண்டும்” என்று கூறியபடி அவர்கள் நடுவே ஓடி வாயிலினூடாக பிதுங்கி வெளியே முற்றம் நோக்கி பாய்ந்தேன்.

“புரவிகளை நோக்கி செல்லுங்கள். இத்தருணத்தில் எவரும் புரவிகளை நாடமாட்டார்கள், ஏனென்றால் புரவிகள் அஞ்சிவிட்டிருக்கின்றன. நமது புரவிகளை நாடிச் செல்லுங்கள். ஒவ்வொருவரும் ஒரு புரவியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூவியபடி நான் ஓடிச்சென்று என்னுடைய புரவியில் தாவி ஏறிக்கொண்டேன். அதைத் தட்டி முற்றத்தைக் கடந்து பக்கவாட்டுப் பாதையில் ஏறினேன். என்னைத் தொடர்ந்து மூவரும் வந்தனர். ஒவ்வொருவரும் எங்கு செல்வது என்று தெரியாமல் திசையறியாது தத்தளித்துக்கொண்டிருந்ததனால் திசையறிந்த நாங்கள் சரியாக வழி கண்டுபிடித்து செல்ல இயன்றது.

நகரமே தெருக்களில் நின்று கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை கண்டேன். “என்ன நிகழ்கிறது?” என்று எதிரே வந்த ஒருவனிடம் கேட்டேன். “நிலம் நடுங்கியிருக்கிறது. பல கட்டடங்கள் விரிசல் விட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அத்தனை பேரும் இல்லங்களிலிருந்து வெளியே வந்து கூச்சலிடுகிறார்கள்” என்றான். இன்னொருவன் “அனைத்து ஒழுங்குகளும் சிதறிவிட்டன. எவரும் எந்தச் சொல்லையும் செவிகொடுக்க சித்தமாக இல்லை” என்றான்.

“செல்க! செல்க!” என்று புரவியைத் தட்டி நான் அவர்களை அழைத்துக்கொண்டு அரண்மனையை சுற்றிக்கொண்டு சென்றேன். பிரத்யும்னனின் படைகள் சிதறிவிட்டிருந்தன. எவருக்கும் எவரும் ஆணையிட முடியாத நிலை. எவரும் எங்களைத் தொடர்ந்து வர இயலாது என்று எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் நான் திரும்பிப் பார்த்தபோது புரவியில் வாளுடன் என்னைத் தொடர்ந்து வந்த அந்த படைத்தலைவனை கண்டேன். அவன் தன் கடமையிலிருந்து ஒருகணமும் விலகவில்லை என்று எனக்கு தெரிந்தது.

“நில்லுங்கள்! நீங்கள் செல்ல நான் ஒப்பமுடியாது” என்று கூவியபடி அவன் வந்தான். நான் மாற்று எண்ணவில்லை. திரும்பி என் இடையில் இருந்த குத்துவாளை எடுத்து அவனை நோக்கி வீசினேன். அவன் எதிர்பாராமல் திகைக்க அவன் கழுத்தில் பாய்ந்த கத்தி ஆழ இறங்க அதை பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் சரிந்து கீழே விழுந்தான். ”வருக!” என்று கூறியபடி நான் புரவியில் விரைந்து யாதவர்களின் அரண்மனைப் பகுதியை அடைந்து அங்கு முற்றத்தில் புரவியை நிறுத்திவிட்டு இறங்கினேன். ”வருக!” என்று அழைத்தபடி மேலே சென்றேன். அங்கு முற்றம் முழுக்க யாதவப் படைவீரர்களும் ஏவலர்களும் நின்று கொந்தளித்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் எவரும் எங்களை அறியவில்லை. நீர்ப்பரப்புபோல மானுடத்திரள் அலையடித்தது. சுவர்களில் சென்று மோதிச் சுழன்றது. அதில் சுழிகள் எழுந்தன.

நான் படிகளில் ஏறுகையில் இயல்பாக திரும்பிப்பார்த்தபோது எதிரே நின்ற மாபெரும் மாளிகை விரிசல்விட்டிருப்பதை கண்டேன். நான் எதை பார்க்கிறேன் என்பது தெரியாமல் “என்ன? என்ன?” என்று கேட்டார் சாருதேஷ்ணன். “அங்கு பாருங்கள்” என்றேன். ”என்ன?” என்று பரதசாரு கேட்டான். அது கீழிருந்து மேலே சென்று மேலே கிளைவிரித்து நின்ற மாபெரும் மரம் போலிருந்தது. அல்லது மேலிருந்து கீழிறங்கும் கரிய மின்னல். “விரிசல்விட்டிருக்கிறது” என்று சாரு சொன்னான். “சேர்த்து நிறுத்தியாக வேண்டும். இல்லையெனில் விழுந்துவிடும்” என்று பரதசாரு சொன்னான்.

“விரிசல்விட்ட கட்டடத்தை எவரும் சேர்த்துவிட முடியாது. விரிசல் என்பது ஏற்கெனவே அதற்குள் இருந்து கொண்டிருக்கும் ஒன்று. அது வெளிப்பட்டிருக்கிறது. தானே அது கீழே விழ முடிவெடுத்த பிறகுதான் முதல் விரிசல் வருகிறது. அம்மாளிகை விழுந்தால் அதன் கீழிருக்கும் மாளிகைகள் ஒவ்வொன்றாக சரியும்” என்றேன். “இப்போது அதைப் பற்றி பேச நேரமில்லை. வருக!” என்றபடி படிகளில் ஏறி எதிர்ப்பட்டவர்களை முட்டி முட்டி விலக்கிக்கொண்டு மேலே சென்றேன்.

மேலிருந்து ஏவலர்களும் படைவீரர்களும் கொந்தளித்து கீழிறங்கிக்கொண்டிருந்தார்கள். அதே எண்ணிக்கையில் சிலர் மேலே செல்ல முண்டியடித்துக் கொண்டிருந்தனர். “வருக வருக” என்று கூறி நான் இடைநாழியினூடாக அவர்களை அழைத்துச் சென்றேன். ”மூத்தவர் எங்கே?” என்றேன். காவலன் “அவர்கள் சொல்சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் இந்த நிலநடுக்கம். அவர்கள் அந்த அறையில் இருக்கிறார்கள்” என்று சொன்னான். “என்னை அழைத்துச் செல்க! அழைத்துச் செல்” என்று கூவினேன். “வருக!” என்று அவன் என்னை கைபற்றி கூட்டிச்சென்றான். அவர்கள் மூவரும் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

பிரத்யும்னனின் இளையவர்களை வியப்புடன் திரும்பிப் பார்த்தனர். ”வருக வருக” என்று அழைத்துக்கொண்டு நான் முன்னால் சென்றேன். அங்கு ஃபானுவின் அறைவாயிலில் இருந்த காவலனை ”என்னை அழைத்துச் செல்க, உள்ளே செல்க!” என்றேன். அவன் கதவைத் திறந்து உள்ளே செல்வதற்குள் இளையவன் வெளியே வந்து “தாங்கள் வருவதை சாளரத்தினுடாக பார்த்தேன். பிரத்யும்னனின் ஆணை பறவைத்தூதாக வந்துவிட்டது. இளையவர்கள் இங்கு வந்திருக்கிறார்களா?” என்றான். “ஆம், வந்திருக்கிறார்கள்“ என்றேன். “அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப பிரத்யும்னன் கோருகிறார்” என்றான்.

நான் திரும்பி மூவரிடமும் “உள்ளே சென்று மூத்தவர் ஃபானுவின் கால்களில் விழுங்கள்” என்றேன். அவர்கள் ஒரு கணத்தில் புரிந்துகொண்டு எங்களைக் கடந்துசென்று அவையில் அமர்ந்திருந்த மூத்தவர் ஃபானுவின் காலடியில் குப்புற விழுந்தனர். “மூத்தவரே, எங்களை காப்பாற்றுங்கள். எங்கள் உயிருக்கு நீங்களே காப்பு” என்று கூவினார்கள். “நான் என்ன செய்வது இப்போது…” என்று சொல்லியபடி அவர் எழுந்தார். நான் ”மூத்தவரே, தங்களிடம் அடைக்கலம் கோரி அவர்கள் வந்திருக்கிறார்கள். இந்நகரைக் காப்பவர், இந்தக் குடிக்கு மூத்தவர் என்ற வகையில் தாங்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றேன்.

முந்தைய கட்டுரைசென்றகாலத்தின் ஆற்றல்
அடுத்த கட்டுரைமதுரம்,பிடி -கடிதங்கள்