‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 2

கோடைமுதிர்ந்து முதல்மழை எழுந்ததும் வரதாவில் புதுவெள்ளம் வரும். விந்தியனின் மேல் விழும் முதல் மழையின் தண்மை சில நாட்களுக்கு முன்னரே வரதாவின் நீர்ப்பெருக்கில் கைதொட்டால் தெரியும் என்பார்கள். முதுகுகர் கர்க்கர் ருக்மிணியை மடியிலமர்த்தி படகோட்டியவர். சிற்றிளமைநாளில் ஒருமுறை அவள் கையைப் பிடித்து ஒழுகும் நீரில் வைத்து “கண்களை மூடி நோக்குங்கள் இளவரசி” என்று சொன்னார். “வெப்பு நோய் உளதா என ஐயம்கொண்டு குழந்தையை தொட்டு நோக்கும் அன்னை போல் தொடுங்கள்” என்றார். அவள் “ஒன்றும் தெரியவில்லையே கர்க்கரே” என்றாள்.

“நீர்ப்பெருக்கின் தோல்போல ஒரு மேல்நீரோட்டம் ஒருவிரல் கணுவளவுக்கு இருக்கும். அதற்கும் அடுத்து விரலை நுழைத்தால் இரண்டாவது அடுக்கில் மெல்லிய வெய்யநீர் ஓட்டமொன்றை உணர்வீர்கள். மேலும் உள்ளே நுழைத்தால் மூன்றாவது விரல்கணு ஆழத்து ஒழுக்கில் நீங்கள் உணர்வது மேலும் மெல்லிய வெம்மையை அல்லவா?” என்றார் கர்க்கர். “ஆம்” என்றாள் ருக்மிணி. “மேலும் ஆழத்திற்கு கையை வைத்தால் வெம்மை மாறுவது தெரிகிறதா?” அவள் “ஆம்” என்று வியந்தாள். “மேலும் ஆழத்திற்கு செல்லுங்கள். என்ன உணர்கிறீர்கள்?” என்றார் கர்க்கர். “குளிரோட்டம்” என்றாள் ருக்மிணி.

“அதுதான்… மேற்கே மலையில் மென் தூறல் விழத்தொடங்கியுள்ளது” என்றார் கர்க்கர். “அது மழைநீரா என்ன?” என்றாள். “இல்லை. மழை மலைக்கு அப்பால் தென்னகத்து விரிநிலத்தைக் கடந்து விரிந்திருக்கும் கடலில் இருந்து வருகிறது இளவரசி. அது தெற்குச்சரிவில் பெய்து மலைகுளிர்ந்து போதும் என்றபின்னர்தான் வடக்குச்சரிவிற்கு ஏறிவரும். அவ்வாறு வருவதற்குள்ளாகவே தெற்குமழையால் மலைப்பாறைகள் குளிர்ந்து விடும். அக்குளிர் நீரோடைகள் வழியாக வரதாவில் கலக்கிறது” என்றார் கர்க்கர். “இன்னும் ஐந்து நாட்களில் வரதா புத்தாடை புனைவாள், பொன்னிறம் கொள்வாள்.”

“நாட்கணக்கை எப்படி அறிந்தீர்கள்?” என்று ருக்மிணி வியக்க முதிய குகர் தன் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்து “அன்னையே, இந்நீர்ப்பெருக்கில் பிறந்தேன். இதிலேயே வளர்ந்தேன். நாளை என் சாம்பலும் இதில் கலக்கும்” என்றார். இல்லம் திரும்பி தன் மாளிகை உப்பரிகையில் அமர்ந்து தொலைதூரத்தில் தெரியும் விந்திய மலையின் முடிகளை அவள் நோக்கியிருந்தாள். அங்கு முகிலேதும் கண்ணுக்குப் படவில்லை. விழிகூசும் வெள்ளிநிற ஒளியுடன் தெரிந்த வானுக்குக் கீழே குழந்தை வரைந்த கோடு போன்று மலை விளிம்புகள் நெளிந்து அமைந்திருந்தன. அங்கிருந்து வருபவை போல சிறிய வெண்பறவைகள் சிறகுகளை உந்தி உந்தி அணுகி தங்கள் நீர் நிழல்கள் வரதாவின் பெருக்கில் விழுந்தமைய கடந்து சென்றன.

அவை சிறகு அடித்து வரும் காற்று மேலும் எடை கொண்டிருப்பதாக அவளுக்குத்தோன்றியது. அன்று மாலை கர்க்கரிடம் அதை சொன்னபோது “உண்மையிலேயே அப்படித்தான் இளவரசி. காற்றின் செறிவு மிகுந்திருக்கிறது. காற்றிலுள்ள நீரால் அப்பறவைகளுடைய சிறகுகளின் எடையும் மிகுந்திருக்கிறது. அவை நாம் மணலில் நடப்பது போல அழுந்தி சிறகுகளை அசைத்து பறந்து செல்கின்றன” என்றார். “அப்பறவைகளை நோக்கியே மழை வரப்போவதை சொல்ல முடியும்.” ருக்மிணி “மழை எங்கு பெய்கிறது?” என்று கேட்டாள். “விந்திய மலையின் அடுக்குகளுக்கு அப்பால் தெற்கே இப்போது சாரல் அடித்துக் கொண்டிருக்கிறது. முகில்கள் ஆட்டு மந்தைகள் போல தவழ்ந்து மலை வளைவுகளில் மேலேறி வந்து கொண்டிருக்கின்றன” என்றார் கர்க்கர்.

முதிர்கோடையின் மாலை ஒன்றில் அவள் இருள்வதுவரை மலைமடிப்புகளை நோக்கிக் கொண்டிருந்தாள். மலையின் நீலநிறம் சற்று அடர்ந்து வருவதாகத்தோன்றியது. மலை மடம்புகளும், மரங்கள் எழுந்த மடிப்புகளும், அதிலுள்ள சிறு குகைகளும், உச்சியில் மாட்டின் பற்கள்போல் எழுந்து நின்ற பழுப்புநிறத் தனிப்பாறைகளும் மேலும் தெளிவு கொண்டன. மலைப்பாறைகளின் முகங்களில் இருந்த வடுக்களை நோக்கிக் கொண்டிருந்தாள். எத்தனையோ முறை அந்த உப்பரிகையில் அமர்ந்து அந்த மலை மடம்புகளை அவள் நோக்கியிருப்பதாகத் தோன்றியது. மீள மீள அந்த மண்ணில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறேனா? மீளமீள இந்த இனம்புரியாத ஏக்கத்துடன் இருந்து கொண்டிருக்கிறேனா? இங்கிருப்பவள் எவள்? அந்த மலையுச்சிப்பெரும்பாறைகள் போல காலமறியாத கடுந்தவம் ஒன்றில் அமர்ந்துள்ளேனா?

வியர்வையில் நனைந்த ஆடையுடன் இறகுச்சேக்கையில் புரண்டாள். அவள் உடல்தொட்ட மரவுரிப்போர்வை நனைந்தது. மீண்டும் மீண்டும் எழுந்து மண்குடுவையில் இருந்த ராமச்சவேர் போட்ட குளிர்நீரை குடித்துக்கொண்டிருந்தாள். அன்று அவள் துயில நெடுநேரமாகியது. உடல் புழுங்கும்போது எண்ணங்களும் நனைந்த துணிபோல எங்காவது ஒட்டிநின்று படபடக்கின்றன.

நள்ளிரவில் எப்போதோ சாளர ஒலி கேட்டு எழுந்து நோக்கியபோது அறைக்குள் இளங்காற்று சுழன்று கொண்டிருந்தது. அதன் மணம் வேறுபட்டிருந்தது. வேம்பின் தளிரிலை மணமும் புங்கமரக்கிளைகளின் மெல்லிய அரக்குமணமும் கலந்த காற்றுதான் அவள் அறைக்குள் கோடையில் வீசுவது. விடியற்காலையில் என்றால் காலை மலர்களின் மணமும் துயிலெழுந்த பறவைகளின் புதிய எச்சத்தின் காரவீச்சமும் கலந்திருக்கும். ஓரிருமுறை அப்பால் கிளையிலெழுந்த தேன்கூட்டின் மணமிருந்தது. அன்று இருளுக்குள் காற்றில் மெல்லிய வெந்த மண் மணம் கலந்திருப்பது போல் தோன்றியது. எழுந்து மூச்சை இழுத்தபோது அந்தக் காற்று நனைந்திருப்பது போல, உள்ளே சென்றபோது நுரையீரலை எடை கொள்ளவைப்பது போல தோன்றியது.

சாளரத்தை பற்றியபடி வெளியே நோக்கினாள். அரண்மனை குறுங்காட்டில் இலைக்குவையென நின்ற மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. இலைகளின் ஓசை மழை ஒன்று நெருங்கி வந்துகொண்டிருப்பதைப் போல எண்ணவைத்தது. மழைதான் என்று எண்ணிக் கொண்டாள். எக்கணமும் மழை பெய்யக்கூடும். ஆனால் மெல்ல காற்று அடங்கியது. சாளரக்கதவு இறுதியாக வந்து மோதி பின்னகர்ந்து அமைந்தது. திரைச்சீலைகள் ஒவ்வொன்றும் சாளரங்கள் மேல் படிந்தன. காற்று நீர்வடிவமானது போல மூச்சுத்திணறலை உணர்ந்தாள். காது மடல்களில் நீராவியின் வெம்மை எழுந்தது.

சாளரக் கம்பிகளுக்கு அப்பால் தெரிந்த மரக்கிளைகள் ஒவ்வொன்றும் அசைவென்பதே அறியாதது போல நிழல்கோலமாக வானில் படிந்து நின்றன. விழிதெளிந்தபோது இருண்டவானின் கீழ் இருளென தொலைதூரத்து மலைகளை காணமுடிந்தது. அவள் அப்போது வரதாவை நோக்க விழைந்தாள். மஞ்சத்தறைக் கதவைத் திறந்து உப்பரிகைக்குச் சென்று கைப்பிடியைப்பற்றி வெளியே தொலைதூரத்தில் கரிய உலோகத்தின் ஒளியுடன் ஒழுகிக் கொண்டிருந்த வரதாவை நோக்கி நின்றாள். அங்கிருந்து தவளைக் குரல்கள் கேட்பதை அப்போதுதான் அறிந்தாள். பல்லாயிரம் தவளைகளின் விழிகள் இருளில் நீர்மணிகள் என மின்ன தொங்கும் தாடைகளின் துருத்திகள் விம்மி விம்மி அடங்கி எழுந்த முழக்கம் அந்நகர் மேல் படர்ந்தது. ஒற்றைச்சொல் ஒன்று உடையாத நீண்ட மெட்டாக மாறியது போல.

ஒவ்வொரு தவளையையும் விழியணுகி பார்க்க முடியும் போல் இருந்தது. ஒவ்வொன்றும் சொல்லிக் கொண்டிருக்கும் அந்தச் சொல்லை மிக ஆழத்தில் அவளும் அறிந்திருப்பது போல. அவள் விழி மின்னியது போல வரதா ஒளி கொண்டு கரைமரங்களையும் நீரலைகளையும் அதிரும் பெருந்திரைச் சித்திரமென காட்டி மறைந்தது. அவள் தலைக்கு பின்பக்கம் மிக அருகே பெருமுரசொன்று முழங்கியது போல இடி உறுமியது. உடல் விதிர்க்க சற்று பின்னடைந்து சுவர் சாய்ந்து நோக்கினாள். அடுத்த மின்னலுக்காக விழி கூர்ந்தாள்.

வான் நோக்கி விழி தூக்கலாகாது, மின்னல் விழிகளை அழித்துவிடும் என்று செவிலியன்னை சொல்லியிருந்தாள். ஆயினும் மின்னல் எழுகையில் வானை நோக்காமல் இருக்க அவளால் முடிந்ததே இல்லை. “விழியிழந்தாலும் மின்னலை இழக்க மாட்டேன்” என்று முன்னொருமுறை சொன்னபோது செவிலி அவள் தலையை தட்டி “தங்கள் விழிகளுக்காக இப்பாரதவர்ஷத்தை ஆளும் மாமன்னன் ஒருவன் எங்கோ பிறந்திருக்கிறான் இளவரசி” என்றாள். அறுபடாத எண்ணங்களின் பெருக்கை பொன்னிற வாளால் வெட்டியபடி அடுத்த மின்னலடித்தது. முகில்களில் இருந்து கொடிச்சரங்கள் கிளம்பி பலநூறு கிளைகளாக கணநேரத்தில் விரிந்து மண்ணைத் தொட்டு அளைந்ததை அவள் கண்டாள். இடியோசை நூற்றுக்கணக்கான முகில் சுவர்களில் முட்டி முட்டி உருண்டு மண்ணில் வந்து விழுந்து வெடித்தது. வரதா நீலப்பளிங்குப் பரப்பென தெரிந்து மறைந்தது.

மின்னல் மறைந்த மறுகணம் ஆழ்ந்த இருளொன்று சூழ அவள் மட்டும் தனித்திருக்க இடியோசையை தொலைவிலும் அண்மையிலும் ஒரேசமயம் கேட்டாள். மீண்டும் மின்னலுக்காக விழி கூர்ந்தபடி தூணை அணைத்தபடி சிறு பீடத்தில் அமர்ந்து மின்னல் நிகழும் நிகழும் என ஒவ்வொரு கணமாக எதிர்நோக்கி இருக்க உள்ளம் பொறுமை இழந்து மின்னலை அதுவே நிகழ்த்திவிடும் என எண்ணியபோது வானிலிருந்து ஒரு தளிர்மரத்தின் வேர் மண்ணுக்கிறங்கியது. அதை நோக்கி நகைத்தன திசைகள். பின் கரிய பெரு நாகம் ஒன்று வானிலிருந்து மண்ணை நோக்கி தன் நீண்ட செந்நிற நாத்துடிப்பை ஏவியது. அதன் உறுமல் ஓசையுடன் கரிய வால் நுனி எங்கோ தொலை தூரத்தில் நெளிந்தது.

நகரின் தெற்குவாயிலுக்கு அப்பால் விரிந்திருந்த காட்டில் இருந்து காற்று கிளம்பி வருவதை கேட்டாள். அசுரர் படையொன்று போர்க்கூச்சலுடன் பறந்து வருவது போல மரங்களை உதைத்து உலைத்து மாடங்கள் மேல் படர்ந்திருந்த மலர்த்தோட்டங்களை அலைத்து சுவர்களை அறைந்து ஒழுகிப்பரந்து சாளரங்களையும் கதவுகளையும் அசைத்து வந்தது. அவளது ஆடையை அள்ளி பறக்க வைத்தது. குழலை சிறகென எழுந்து நெளியச்செய்தது. விழி மூடி அந்தக் குளிர்த்தழுவலை உடலில் ஏந்தி நின்றாள். ஓரிரு மழைத்துளிகள் அம்புகள் போல அவள் கழுத்திலும் முலைகளிலும் இடுப்பிலும் பாய்ந்தன. சுவர்களில் விழுந்த மழைத்துளிகள் வழிந்து இணைந்து இழிந்து சுவர்மடிப்பில் சிற்றோடையாக மாறின.

காற்று ஓலமிட்டபடி மாளிகையின் அனைத்து அறைகளுக்குள்ளும் நுழைந்து நகைத்தபடிகூவி வெண்கலப் பாத்திரங்களை உருளச்செய்தது. திரைகளை திகைப்புகொண்டு படபடக்கச் செய்தது. மெல்லிய ஊளையுடன் மான்கண் சாளரங்கள் வழியாக கிழிபட்டு கடந்துசென்றது. அனைத்துப்புலன்களாலும் மழை மழை எனக்கூவியபடி அவள் அங்கே அமர்ந்திருந்தாள்.

புலரி எழுந்தபோது நகரம் இளமழைச்சாரலில் நனைந்து நின்றிருப்பதை அவள் கண்டாள். மாளிகையின் ஏழாவது அடுக்கில் ஏறி அங்குள்ள உச்சி நுனி உப்பரிகையில் நின்று சூழ நோக்கி கௌண்டின்யபுரியின் அனைத்து தெருக்களையும் சுற்றிச்சுற்றி நோக்கினாள். இல்லங்களின் மேல் படர்ந்த மலர்த்தோட்டங்களின் நடுவே பள்ளங்களில் ஈரம் பளபளத்தது. புதிய மலர்கள் நீரின் அறைபட்டுச் சோர்ந்து காற்றில் உலைந்த பறவைச்சிறகுகள் போல இதழ்கள் கலைந்து நின்றிருந்தன. இலைகள் அப்போதும் துளிகளை ஒளியென சொட்டிக் கொண்டிருந்தன. கூரைகளிலிருந்து ஊறி சுவர்கள் வழியாக வழிந்த மழைநீர் ஒளியே கறையாக மாறியது போல் தெரிந்தது.

அங்கு நின்று நோக்குகையில் ஒவ்வொரு இல்லத்திற்குள்ளும் ஒருகணம் ஒருகணமென வாழ்ந்து அவள் மீண்டாள். அத்தனை அறைகளுக்குள்ளும் குளிர் நிறைந்திருந்தது. அன்னையர் எழுந்து சென்ற மரவுரியின் வெம்மையில் உடல் குறுக்கி திறந்திருந்த தோள்களும் மார்பும் சிலிர்த்திருக்க குழந்தைகள் துயின்றன. குளிருக்கு உடல் சிலிர்த்து அசைத்த பசுக்களை ஓட்டியபடி ஆய்ச்சியர் வரதாவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கரிய வெற்றுடலின்மேல் நீர்த்துளிகள் விழுந்து வழிய வேளிர் வேளாண் பொருட்களுடன் சென்றனர். வணிகர்கள் தோல் கூடாரங்கள் முகப்பிட்ட கடைகளை அப்போதும் திறந்திருக்கவில்லை. மெல்லிய காற்றில் புடைத்தெழுந்து மீண்டும் அமிழ்ந்து நீர்த்துளிகள் தெறிக்க ஒட்டகத்தோல் வளைவுகள் படபடத்துக் கொண்டிருந்தன.

அங்கு நின்றபோது ஒரு சிறுமியென அத்தெருக்கள் அனைத்திலும் ஓடி விளையாட வேண்டுமென்று உளமெழுந்தது. சிறிய பட்டாம்பூச்சியாக மாறி தெருக்களின் காற்றில் ஒழுகி அலையவேண்டும் என்றும் ஒரு பறவையென பறந்து வானில் தன் நிழலால் அந்நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் தொட்டபடி பருந்தென சுழன்று வரவேண்டுமென்றும் விழைந்தாள். அவள் பின்னால் வந்து நின்ற அமிதை “இளவரசி, மழைத்தூறல் விழுகிறது. தாங்கள் இப்போது வரதாவில் செல்ல விழைவீர்களா?” என்றாள். “ஆம். உடனே ” என்றபின் அவள் துடிப்புடன் எழுந்து உள்ளறைக்குள் சென்றாள்.

“முதல்மழைப்பருவம் எழுந்துவிட்டது” என்றாள் செவிலி. “தளிர்ப்பருவம் இது. இளம்பச்சை ஆடைகள் எடுத்து வைத்திருக்கிறேன்.” ருக்மிணி ஆடைகளை குனிந்து நோக்கினாள். தளிர்மெருகு கொண்ட பச்சைப் பட்டாடையை நோக்கி “இதை அணிந்து கொள்கிறேன்” என்றாள். அவளை எதிர்நோக்கி வந்த இரு சேடியர் “இளவரசி, நீராட்டறை ஒருங்கிவிட்டது” என்றனர். அவர்களுடன் சென்று இளவெம்மை கொண்ட நறுநீரில் ஆடி, குழல் புகையிட்டு ஆற்றி, நறுஞ்சுண்ணம் பூசி திரும்பி வந்தாள்.

ஆடை அணிந்து அணி புனைந்து அவள் கீழே வந்தபோது மாளிகையின் படகுத்துறையில் அணிப்படகு இளம்பச்சை நிறப் பாய்களுடன் சித்தமாக இருந்தது. அமர முனையில் நின்றிருந்த முதிய குகர் கர்க்கர் கண்கள் சுருங்க கன்ன மடிப்புகள் இழுபட்டு நெளிய “தலை வணங்குகிறேன் இளவரசி. தளிர் கொண்டுவிட்டீர்கள்” என்றார். “ஆம்” என்று அவள் சிரித்தாள். “மலர்கொள்ள வேண்டும் விரைவில்” என்றார் கர்க்கர். அவள் சிரித்தபடி நடைபாலத்தினூடாக ஏறி படகின் உள்ளே சென்று தனது பீடத்தில் அமர்ந்தாள். கர்க்கர் வந்து நீண்ட கழியை நீருக்குள் ஊன்றி உன்னி படகை தள்ளினார். அலையில் வந்து கரை முட்டி மீளும் நெற்று போல படகு ஒழுக்கில் எழுந்தது.

“ஜனகனின் மகளே எழுக!
திருவின் உருவே புவியின் வடிவே
நீலமணியின் நெருப்பொளியே எழுக!
நீர்மேல் எழுந்த நிலவே எழுக!”

என்று பாடியபடி கர்க்கர் தன் கழியை ஊன்றி படகை மேலும் மேலும் ஒழுக்கை நோக்கி கொண்டு சென்றபின் அதை நீள்வாக்கில் படகின் விளிம்பில் பொருத்திவிட்டு இரு துடுப்புகளை எடுத்துக்கொண்டார். அவரது இறுகிய தசைநார்கள் சிற்றலைகள் என நெளிய கைகள் சுழன்றன. மீன் சிறகுகள் போல எழுந்து நீரில் ஊன்றி வளைந்தெழுந்த துடுப்புகள் படகை முன்கொண்டு சென்றன.

“இன்னும் புது வெள்ளம் வரவில்லையே?” என்றாள் ருக்மிணி. “இப்போது தொட்டுப்பாருங்கள் இளவரசி” என்றார் கர்க்கர். அவள் குனிந்து கையை நீர்ப்பரப்பில் வைத்தாள். முன்பு ஒரு விரல்கணுவின் ஆழத்திற்கு இருந்த அந்த வெம்மை கொண்ட நீர்ப்படலம் மறைந்திருந்தது. நீரின் மேற்பரப்பே பனியில் கிடந்த பட்டாடை போலிருந்தது. கர்க்கர் சிரித்தபடி “வெம்மை முழுக்க கடலுக்கு சென்றுவிட்டது. குளிர் நீர் வந்து கொண்டிருக்கிறது” என்றார்.

ருக்மிணி விழிதூக்கி மேற்கு மலைகளை நோக்கினாள். அவை மிக அருகே கட்டப்பட்ட நீலத் திரைச்சீலைகள் போல தெரிந்தன. அவற்றில் இருந்த மலைமடிப்புகளனைத்தும் மறைந்து நீலப் புகையால் ஆனவை போல் எழுந்திருந்தன. எடையற்றவை போல. மழைக்காற்று அவற்றை ஊதிச் சிதறடித்துவிடும் என்பது போல. “முகில் மூடிவிட்டது. அங்கு பெருமழை நின்று பெய்து கொண்டிருக்கிறது” என்றார் கர்க்கர்.

“அங்கு நின்று மழை பெய்வது எப்படி தெரியும்?” என்றாள். “அதோ தெரியும் நீலப்புகை மழைதான்” என்றார் கர்க்கர். அவள் மலைசூடிய மழையை நோக்கிக் கொண்டே இருந்தாள். “மழையின் நிறம் நீலமா?” என்று கேட்டாள். “இந்திரநீலம்” என்று அவர் மறுமொழி சொன்னார். “நீலம் அருளின் நிறம்” என்றார் குகர். “இப்புவியை அணைத்திருக்கும் இருள் நமக்கென புன்னகை கொள்வதன் நிறம் அது. புடவியை அணைத்திருக்கும் முடிவிலா பேரருள் நமக்கென கனிந்து செய்யும் புன்னகை.”

ருக்மிணி மலையின் நீலத்தை நோக்கி விழி மலர்ந்து அமர்ந்திருந்தாள். அதை நீலமென எண்ணும்போதே சாம்பல் நிறமென்றும் சற்று விழிதிருப்பி மீண்டு நோக்கும்போது மெல்லிய பட்டுநீலம் என்றும் அதன் மேல் சூரிய ஒளி விழுகையில் நீர்நீலம் என்றும் விழிமயக்கு எழுந்தது. நீலத்திலிருந்து விழி விலக்க முடியவில்லை. அவள் வரதா தனக்களித்த கனவை எண்ணிக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அந்நினைவு கனவு மீள்வதுபோலவே எழுகிறதென்பதை வியந்தாள்.

வரம்தருபவள் கனவில் வந்தளித்த அந்த மணியை அவள் பலமுறை மீள மீள நோக்கியிருக்கிறாள். உள்ளங்கையில் வைத்து அதை நோக்குகையில் மண் மீது அமைந்த ஒரு நீலமலை அது என தோன்றியது. திகைப்புடன் விழி விலக்கி அங்கிருந்து தெரிந்த மலை அடுக்குகளை நோக்கியபோது அவள் கையில் வரதா கொண்டு வந்து வைத்து அளித்த அந்த மணியின் வடிவும் அதுவே என்று அறிந்தாள். இது உளம் கொள்ளும் விளையாடலா என்று வியந்தாள். இல்லை என்று மீண்டும் மீண்டும் திகைப்புடன் அறிந்து கொண்டாள். கௌண்டின்யபுரியின் மேல் ஓங்கி நின்றிருந்த ஹஸ்தகலசம் என்ற மலையின் அதே வடிவைத்தான் அந்த மணியும் கொண்டிருந்தது.

கர்க்கர் வரதாவின் நடுச்சுழலில் படகை மெல்ல திருப்பியபடி “நாளை மறுநாள் வரதாவில் புதுவெள்ளம் பொங்கிச் செல்லும். புது வெள்ளவிழவுக்கு அதற்குள் நாள் குறித்திருப்பார்கள்” என்றார். ருக்மிணி திரும்பி “ஆம்” என்றாள். கர்க்கர் “எங்கள் குலமூத்தார் எழுவரிடம் அமைச்சர் இன்று காலை தூதர்களை அனுப்பியிருக்கிறார். புது வெள்ளம் வரும் பொழுதை அவர்கள் இப்போது குறித்து அனுப்பியிருப்பார்கள். நாளை உச்சிப்பொழுது கழியும்பொழுது வரதா நிறம் மாறத்தொடங்கும். மாலையில் இளஞ்செம்மை அடையும். நாளை மறுநாள் காலையில் சேற்றுமண்ணும் மலைமலர்களும் காட்டின் மணமும் கொண்டு புதுவெள்ளம் சுழித்துச் செல்லும். இன்னொரு இனிய வருடம் தொடங்கும்” என்றார்.

புதுவெள்ளம் வரும்போது ஆயரும் உழவரும் அதை வணங்கியாக வேண்டுமென்பது கௌண்டின்யபுரியின் தொல்குடிநெறிகளில் ஒன்று. அதை விருஷ்டிப் பெருநாள் என்று அழைத்தனர். வரதாவில் வரும் புதுவெள்ளம் அதன் அலைநுரை விளிம்பில் செந்நிற நுரைக் குமிழிகளாக மென்மையான சேற்றை கொண்டிருக்கும். அலை பின்வாங்கி படிகையில் அந்தச் சேற்று வளையங்கள் கரைமணலில் பால் அருந்திய மகவின் மேலுதட்டில் நுரை என எஞ்சும். சுட்டு விரலால் அவற்றை வழித்து சந்தனம் என கைகளிலும் நெற்றியிலும் அணிந்து கொள்வர் வேளிரும் ஆயரும். குலமூத்தார் கலங்கிய மழைநீரை அள்ளி முகம் கழுவுகையில் “இன்னொரு ஆண்டு இளமை கொண்டீர்” என்று கேலிபேசி சிரிப்பார்கள். கன்றுகளை கொண்டுவந்து அந்தச் சேற்று மணம் காட்டி களிவெறி கொள்ளச் செய்வார்கள்.

நீரில் சுழன்றுவரும் மலைமலர்களும் சேறும் கலந்து கரையோரப் பாறைகளில் மணல் கரைகளில் விரித்த அடுக்குவிசிறி என படிந்து உருவாக்கும் சித்திரத்தைக் காண நகர் முழுக்க இருந்து குடிகள் எழுந்து வருவார்கள். எத்தனை அடுக்கு என்று நோக்குவது தொல்வழக்கம். வெள்ளம் வடிந்தபின் அவற்றை எண்ணுவார்கள். பன்னிரண்டு அடுக்குகள் இருக்கும் என்றால் அந்த வருடம் மண் நிறைந்து பொலியும் என்பது வேளிர்களின் கணிப்பு. அவ்வருடம் கன்று பெருகும் கலம் நிறையும் என்பது ஆயர் துணிபு.

இளமை முதலே பார்த்திருந்த ஒவ்வொரு புதுவெள்ளத்தையும் அவள் நினைவு கூர்ந்தாள். ஒவ்வொரு முறையும் வரதா வடிந்தபின்னும் நெஞ்சுக்குள் அப்பெருக்கு எஞ்சியிருப்பது போல தெரியும். வெள்ளம் வந்த சுவடே இன்றி முன்னால் வரதா ஓடிக்கொண்டிருக்கும். அவள் குனிந்து மீண்டும் மீண்டும் வரதாவின் நீரையே அள்ளி அளைந்து கொண்டிருந்தாள். கர்க்கர் அவளை நோக்கி சிரித்து “தங்கள் உள்ளத்தில் புதுவெள்ளம் பெருகிவிட்டது இளவரசி” என்றார். “என்ன பேசுகிறீர்?நான் நீரை நோக்குகிறேன்” என்றாள் அவள் பொய்ச்சீற்றத்துடன். “நூற்றுக்கணக்கானமுறை என் மடியில் நீர்கழித்திருக்கிறீர்கள் நீங்கள். உங்கள் அகம் அறிய எனக்கு வேறுவிழி ஒன்று தேவையா என்ன?” என்றார் கர்க்கர்.

அவள் “என்ன அறிந்தீர்?” என்றாள். “வந்துவிட்டான்” என்றார். “யார்?” என்றாள். “விழைபவன்” என்றார். “யாரென நானறியேன் கர்க்கரே” என்று அவள் சொன்னாள்.

முந்தைய கட்டுரைடெக்ஸாஸில் சுற்றியபோது…
அடுத்த கட்டுரைஹிட்லரும் காந்தியும்