பின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்

pin-thodarum-nilalin-kural-36851

ஜெமோ,

விஷ்ணுபுரம் தந்த மூளைக் களைப்பை போக்கிக்கொள்ள, பின்தொடரும் நிழலின் குரலை நாடியிருந்தேன். இன்னும் படித்து முடிக்கவில்லை.

ம்ஹூம்…விஷ்ணுபுரத்தை விட களைப்பைத் தருகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் போட்டுத் தாக்குகிறது. மிகச் செறிவானவை. செரித்துக் கொள்ள கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் செரித்தபின் வரும் ஆற்றலும் அது தரும் உற்சாகமும்…அடடா…எங்கோ வானத்தில் மிதந்து செல்ல வைக்கிறது. அந்த உற்சாகம் தான் இக்கடிதத்தை என்னை எடுத்து எழுதிக்கொண்டிருக்கிறது.

விவரணைகள் போதும் என்று நினைக்கிறேன். விஷயத்திற்கு வருகிறேன். ஏனோ தெரியவில்லை இந்நாவல் முழுவதும் வரும் அருணாசலத்தையும், வீரபத்திரபிள்ளையும் விட கதிரே மிக அணுக்கமாக வருகிறார் எனக்கு. ஒருவேளை எக்காலத்திலும் இருக்ககூடிய இளமையான, புத்திசாலியான, விவேகமாக பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகளை கதிர் பிரதிபலிப்பதாலோ என்னவோ.

இலட்சியவாதிகளுக்கு அவர் புழு போலத் தெரியலாம். ஏனென்றால் நீங்கள் அருமையாக கட்டுடைத்ததைப் போல, இலட்சியவாதம் = நிகழ்கால அதிருப்தி + எதிர்கால கனவு + அதற்கான தியாகம். அதிருப்தியால் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, திருப்தியாக நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கதிர் போன்றவர்களை புரிந்து கொள்ளமுடியாது தான்.‎

மேலும், அருணாச்சலம் வீரபத்திரபிள்ளையின் புத்தகத்தை திரும்பவும் படிக்கும் போது, முன் வாசித்த பக்கங்களை காணாமல் துணுக்குறுவது. ஆனால், அப்படி ஒரு பக்கங்களே இருந்திருக்கவில்லை என்று உணரும்போது, அருணாச்சலத்தை விடுங்கள், எனக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. ஒன்றில் ஆழ்ந்து போதலை, இதைவிட நுட்பமாக சித்தரிக்கமுடியாதென்றே எண்ணுகிறேன்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய், புகாரினுக்கும, அந்திரியானுக்கும் சிறையில் உள்ள குளியலறையில் நடக்கும் உரையாடல்.

தர்க்கமும் படிமமும் சேரும் புள்ளி. தத்துவமும் கவித்துவமும் இணையும் இடம், இவ்வுரையாடல்.

கவித்துவத்தின் கால்களாய் தருக்கம். தருக்கத்தின் சிறகுகளாய் படிமம்.

இவ்வரிகள் தத்துவமா, இல்லை கவிதையா?

படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளனுக்கு, இது தருக்கமும் படிமமும் ஒன்றையொன்று நிரவிக்கொள்ளும் இடம்.

இரு துருவங்கள் ஒன்றாக இணையும் இடம். இவ்விரு துருவங்களுக்கிடையே ஊஞ்சலாடும் போதே, ஒரு எழுத்தாளன் படைப்பூக்கத்துடன் இருக்கிறான்.

புஸ்கினும், மார்க்ஸூம் சந்திக்கும் புள்ளியே தஸ்தயேவ்ஸ்கி…Classic சாரே…it is Classic. புரியாத ஒன்று புரிந்து விட்டதாய் மனம் கிடந்து தடுமாறி குதூகலிக்கிறது.

ஒவ்வொரு எழுத்தாளனும், எழுதநினைக்கும் வாசகர்களும் தவற விடக்கூடாத அத்தியாயம் இது.

கடைசியாக, ஜெமோவே இந்நாவலில் ஒரு கதாபாத்திரமாக வருவது. அதுவும் எழுத்தாளனாக. அதிலும் அதிகப்பிரசங்கி எழுத்தாளனாக. உங்களுக்கே உரிய சுயபகடித் திறன்.

அன்புடன்

முத்து‎

***

முந்தைய கட்டுரைவெற்றி கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைசபரிநாதன் கவிதைகள்